Tuesday, January 31, 2012

வானொலியில் செய்தி வாசிப்பது எப்படி


வானொலியே செய்திகளை விரைவில் கொண்டு செல்லும் ஒர் சாதனமாகும்.இதனால் வானொலிச்செய்தியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது,குக்கிராமத்தில்,அடர்ந்த காட்டில்,கடல்களில்,வேலைகள் செய்து கொண்டும்,வாகானத்தில் பிரயாணம் செய்து கொண்டும்,நாட்டு நடப்புக்களையும்,உலக நடப்புக்களையும், வானொலிச் செய்தியறிக்கை மூலமாக மாத்திரமே இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.

சகல செய்திகளும் முக்கியமானது ஆனால் எமது உள்ளுர் செய்திகள் எமக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தம்மை நேரடியாகத் தாக்கும் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து கேட்பார்கள்.எனவே வானொலியில் 10 நிமிடங்கள் வாசிக்கும் செய்தியறிக்கையானது அந்த 10 நிமிடங்களும் மக்களின் வாழ்க்கையில் 60 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்பதால்,எந்தக்காட்சிகளுமின்றி குரல் வழிமூலமாக வரும் வானொலி செய்தியறிக்கையை  வாசிப்பவர்கள் மிக கவனமாக வாசிக் வேண்டும்.

வாங்க செய்தி வாசிக்க...

*.செய்தி வாசிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக சமூகமளியுங்கள்

*முழுச் செய்தியறிக்கையும் உங்கள் கையில் கிடைக்கும் போது இரண்டு நிமிடங்களே வாசிப்பு நேரத்திற்கு இருக்கக் கூடும்.இதற்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அந்த வேளைகளில் பரபரப்பு அடையாதீர்கள்.

*.பல அம்சங்கள் முன்கூட்டியே கிடைத்துவிடும் கவனமாகவும்,உரத்தும்,வாசித்துப் பாருங்கள்,ஏனென்றால் எழுத்துப்பிழை, வசன அமைப்புச் சிக்கல்,மொழிபெயர்ப்பில் பிழை இப்படி பல இருக்கலாம்.நீங்கள் அதனை உரத்து வாசிக்கும் போதுதான் மூளைக்கு தவறுகள் நன்கு புலப்படும்..

*.நீங்கள் சரிவர செய்தி வாசிப்பதானால் அறிக்கையில் தரப்பட்டுள்ளவற்றை சரிவர புரிந்து கொள்வது அவசியம்.எனவே செய்தி ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள்..

*.உச்சரிப்பை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் செய்தி ஆசிரியர் வேலையில் மும்முரமாகயிருந்தால் தெரிந்த வேறொருவரிடம் கேளுங்கள்..

*.வசனங்களை முற்றுமுழுதாக மாற்றும் பொழுது அர்த்தம் பிசகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

*.சிலர் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியில் கவனம் செல்லாது,அவரது வாசிப்பில்தான் நேயர்களின் கவனம் செல்லும் காரணம் அவர் மோசமாக செய்தி வாசிப்பதுதான்.நல்ல செய்தி வாசிப்பாளர்  வாசிக்கும் பொழுது செய்தியில்தான் நமது கவனம் செல்லும் அவர் செய்தி வாசித்து முடித்த பின்னர்தான் அவரைப்பற்றிப் பாராட்ட தோன்றும்..

*.கவனமாகவும் சற்று உரத்தும் வாசிப்பது நல்லது ஆனால் அதற்கான விசேட குரல் தேவையில்லை வழமையை விட சற்று குரலை உயர்த்தினால் போதுமானது..

*.பல ரகப்பட்ட செய்திகள் இருக்கும்.அப்போது சிறு மாறுதல் வேண்டும் குரலில், ஆனால் நடிப்புத் தொனி வருதல் கூடாது..

*.முக்கியமான விடயங்களில் சிறிது அழுத்தம் கொடுத்தும்,குரலை சிறிது தாழ்த்தியும் வாசிக்கலாம்..

*.கண்கள் முன்னே செல்ல குரல் பின்னால் தொடர வேண்டும்..

*.நம்பிக்கையில்லாவிட்டால் உங்கள் குரலில் தடுமாற்றம் தெரியும்..

*.சிறிதாக தடங்கினால் அது பாதகமில்லை மன்னிப்புக் கோரவேண்டியதில்லை ஆனால் பாரதூரமான மாற்றம் என்றால் நிச்சயம் மன்னிப்புக் கோர வேண்டும்..


*.நீங்கள் பதட்டம் இல்லாமலிருப்பின் உங்கள் சுவாசமும் வழமைபோல் இருக்கும்.வசனத்துக்கு வசனம் வாசித்தல் கூடாது,வாசகத்திற்கு வாசகம் வாசித்து நிறுத்த வேண்டும்..

*.பெரிய சொற்கள் வரும்பொழுது ஒரே மூச்சில் வாசித்து முடிக்காமல் சிறிது நிறுத்தி வாசிக்கலாம்..

*.உங்கள் முகத்தை ஒலிவாங்கியிலிருந்து அங்குமிங்குமாக திருப்பாதீர்கள்..

*.இரு அம்சங்களுக்கு இடையில் சிறிது மௌனம் அவசியம்..

*.உங்கள் அபிப்பிராயம் தொனிக்க வாசித்தல் கூடாது..

*.அதிகாரபூர்வமாக ஆனால் அகங்கார தொனியில் வாசித்தல் கூடாது..

*.உரக்கச் சப்தமிட்டு வாசித்தலும் கூடாது..

*.உங்கள் குரலை நீங்களே ரசிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.அனுபவம் உள்ளவர்கள் கெட்போன் போடுவார்கள் ஏனெனில் அவர்கள் தமது குரலை கவனிக்காமல், பிழைகளைக் கவனிக்கும் அனுபவத்தை பெற்றிருப்பதால்..


*.ஒரு அம்சம் முடிந்ததும் அது பற்றி மறந்து அடுத்து வரும் அம்சத்தில் கவனம் செலுத்தி வாசிக்கவும்..

*.இயற்கையான சரளமான போக்கு விரும்பத்தக்கது..

*.சரியான உச்சரிப்பு சரியான மாத்திரையளவில் இருப்பது அவசியம்..

*.எந்த ஒரு செய்தி வாசிப்பாளரையும் நீங்கள் பாவனை செய்யாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு,நல்லதென்று நாலு பேர் சொன்னால் தொடர்ந்து உங்கள் பாணியைக் கடைப்பிடியுங்கள்,சரியாக இல்லையென்றால் சிறிது கவனித்து மாற்றம் செய்யுங்கள்..

*.வேறு செய்தி வாசிப்பாளர்களின் வாசிப்பை விமர்சன ரீதியாகக் கவனித்து நல்ல அம்சங்களைத் தெரிந்து பின்பற்றுங்கள்..

என்னால் முடிந்தளவு ஓர் சிறந்த செய்தி வாசிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.இவ்வாறான அம்சங்களை கடைப்பிடிக்கின்ற போதுதான் ஓர் செய்தி வாசிப்பாளரினால் சிறந்த முறையில் செய்தி வாசிக்கவும் முடியும்,அதேவேளை நல்ல செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தவும் முடியும் எனவே வானொலி செய்தி வாசிப்பாளர்கள் தங்களது அளப்பரிய பொறுப்புணர்ந்து இவற்றை மறந்து விடாது செயற்படுங்கள்...


Wednesday, January 11, 2012

விழியின் வலி...



என் இளமையை தின்று
அவள் வீசிய பார்வையால்
மயங்கி நின்ற அவளின் விழியோரம்
காதலாய் கவ்விக்கொண்டேன்...


உன் கூட்டுக்குள்
என்னை முடக்கியது போல்
உன் விழிகளுக்குள்
யார் யாரையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்...


புனிதம் போர்த்திய உன் பார்வை
எனக்கு சொந்தமென்று நம்பியிருந்தேன்
இன்னுமொருவனுக்கு
உன் பார்வையை வாடகைக்காய் அனுப்பிய போது
அது காமமாய் அலைந்தது...


இப்போது
பல தெருக்கள் கடந்து
நீ மணம் வீசுகிறாய் கண் கவர் காதலியென்று
உன் விழியோரம் மேய்ந்த என் காதல்
ஊர் தாண்டி அழுகிறது
இவன் காதல் பாவமென்று...


உந்தன் இனிப்புக்காய்
கரையானாய் அலைந்தேன்
உன் உணர்வுகளில் வெட்கமானேன்
ஆனால்,இப்பொழுதுகளில்
எந்தன் விழிகள் உன்னுடன் முரண்படுகிறது
அவ்வேளைகளில் என் கண்கள் சிவக்கிறது...




Thursday, January 5, 2012

அடுக்கு மாடியில் ஓர் சக்கரை...



உன் உடம்பின் இயலாமையை
உனக்குள் மறைத்துக் கொண்டு
என்னை திருப்திப் படுத்த
உள்ளூர உன்னை மீறிய
வலிகளை தாங்கிக் கொண்டாய்...


தலையணையை
அணைத்துக் கொண்டு
கட்டிலில் சுதந்திரமாய்
ஓய்வெடுக்க வேண்டிய நீ
உன் தலை வலியை
எங்கோ காற்றில் மேய விட்டு
புதுப் பெண்ணாய்
என்னை ஆசுவாசப்படுத்தினாய்...


பல நேரமாய்
ஒட்டியிருந்த என்னை
குத்திக் குதற
சில நேரம் நீ நினைத்திருக்கலாம்
அதையும் அடக்கி
உன்  மென்மையான
புன்னகையை மலர்ந்தாய்
அது ஆயிரம் இதயங்களையும் தாண்டி
காதல் தரும் புன்னகை...


வெறுங் கையுடன்
உன் அரண்மனைக்குள் வந்த போது
விருந்தாளியாய் கவனித்தாய்
உன் பெரு மனதால்
நான் வெட்கித்துப் போனேன்...


அங்கு வந்திருக்கக் கூடாது
உனக்கு தொந்தரவு தந்திருக்கக் கூடாது
உன் சக்தியை மீறிய இயலாமையால்
வாடி நின்ற உன் முகம் பார்த்து
என் மனம் அழுதது
உனக்கு உரிமையில்லாத நான்
உன் தலை முடியை கோதி
எப்படி ஆறுதல் படுத்துவேன்

இருந்தாலும்
உன் நலவுக்காய்
என் எல்லாப் பிரார்த்தனைகளுடனும்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்...