Thursday, September 29, 2011

கனவில் வரைந்த கடிதம்...

 
வேலை நிமித்தமாக பல வருடங்களாக வெளியூரில் வசிக்கின்றேன்.விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்புகின்றபொழுது,திருமணத்திற்கு பின் சந்திக்கின்ற முதல் பிரிவைப் போல் ஓர் சோகம் என்னுள் குடி கொள்ளும்.
 
 அம்மா,அப்பா,அக்கா.அண்ணா,தங்கை,மருமக்கள்,நண்பர்களிடமிருந்து விடைபெறும் பொழுது ஓரத்தில் நின்று கொண்டு விழி நிறைந்த கண்ணீரோடு என்னைப் பார்க்கும் காதலியின் இனம் புரியாத பாசம் பயணத்திற்காய் புறப்பட்ட என்னை  ஒரு அடியேனும் நகர விடாமல் அந்த இடத்திலேயே கட்டி வைக்கும்.காதலிப்பதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன்.உணர்ந்ததில்லை,இப்போதுதான் என்னை தனிமை தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு காதலின் கட்டுப்பாட்டுக்குள் கடந்து செல்லும் ஒவ்வொரு காதலர்களின் நினைவுகளும் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய்  என் மனக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கின்றன. 
 
காதலைச் சொல்ல உன் தெருவுக்கு வந்த முதல் நாளில் ஏற்பட்ட ஸ்பரிஷத்தில் என் உடல் நடுங்கியது.முதல் வார்த்தையை பரிமாறிக் கொள்வதில் விழிகளுக்கும்,இதழ்களுக்கும் இடையே நடந்த வெட்கப் போராட்டம்,நான் நிமிர்வதும் நீ குனிவதும், நான்குனிந்த பின் நீ விழிகளை உயர்த்திப் பார்ப்பதும்.அந்த அழகிய நிமிடங்கள் என நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

பல மனிதர்களின் உணர்வுகளின் மொழிகளையும்,கணினி நுட்பங்களையும்,கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் காதலின் உனதான வெட்க மொழியை புரியாமல் தடுமாறியிருக்கின்றேன் பல முறை,நீ கண்களை உருட்டுவதும்,மௌனம் சாதிப்பதும்,புன்னகைப்பதும், உன் வெட்க மொழியில் வெவ்வேறு அர்த்தமாமே,எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.


ஒரு நாள் மாலைப் பொழுதில் கண்ணை மயக்கும் சுடிதார் அணிந்து வீதியால் நடந்து வந்த அழகை வண்டுகள் பார்த்திருந்தால் பொறாமைப் பட்டிருக்கும்,மயில்கள் மயங்கி போயிருக்கும்.மழை பெய்து ஓய்ந்த பின் சூடான தேநீர் கோப்பையுடன்,இனிப்பான பலகாரத்தட்டுக்களுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டினாய்.உன் அன்பான தித்திப்பால் அப்போது இனிப்பான பலகாரம் இனிப்பின்றி போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.

வீட்டுக் கூரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் மௌன மொழியை ரசிக்கவேணும்,மிட்டாய்க்காய் அடம் பிடித்து அழும் சிறு பிள்ளையைப் போல் உன்னிடம் செல்லத்தனமாய் அழுவதற்கேனும் முன்னையக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன்...

 பாவம் கனவு பலிக்கவில்லை இப்படி எத்தனை நாட்களுக்கு   கனவில்  கடிதம் எழுதுவது....



Tuesday, September 27, 2011

உன் தூரல் என்னில்.....


நீண்ட இடவெளிக்கு பின்னர்
உலர்ந்து போன  என் மனதில்
மழைத் தூரலாய் விழுந்தாய்
அது கோடைக்கு பின்னரான
மழையாய் என்னை நனைத்தது.....

பூ வாசமாய் மணம் பரப்பும் உன்னை
அமைதியான நதியைப் போல் நேசித்தேன்
ஏக்கங்களுடன் விழுங்கிய
என் காதல் வார்த்தைகளை
சிறு துளியளவு கூட புரிந்து கொள்ளவில்லை
உன்னை சந்தித்து திரும்பும் போதெல்லாம்
ஏமாற்றத்துடன் விடை பெறுவேன்.........

வாழ்க்கை கடலில் பயணிப்பதற்காய்
நான் கட்டிய கனவுக் கப்பல் திசைமாறிப்போயுள்ளது
ஆதலால் என் மனக் கப்பலும் உடைந்து போனது
நீண்ட இடவெளிக்குப் பின்னர்
இப்போதுகளில் உன் பாசத்தை
மழையாய் என் மீது கொட்டுகிறாய்
எப்படி சரி கட்டுவேன்
உன்னால் உடைந்து போன என் மனக் கப்பலை....

 நீ எழுத்துப் பிழைகளுடன்
அனுப்பி வைத்த கவிதைகளை
என் சின்ன வயதுப் புகைப் படத்தை
பார்த்து மகிழ்வதைப் போல்
இப்போதுகளில்
நான் அப்படி மகிழ்வதை தவிர
வேறென்னதான் செய்ய முடியும்...

 நீண்ட நாட்களுக்கு பிறகு
மயிலிறகு வார்த்தை கொண்டு
என் மேனியை நீ தடவினாய்
அது மென்மையாய் என்னை தாலாட்டியது
உனக்குள் நான் இல்லாத போதும்
எனக்குள் நீ எப்போதும் ஞாபகமாய் பயணிப்பாய்....


Thursday, September 22, 2011

வாடகை வீடு....


பல்லாயிரம்
கனவுகள் சுமந்து
வாடகை வீட்டில்
வாழ்க்கை கழிகிறது....

நிரந்தரமில்லா
இந்த வாடகை வீட்டில்
ஒரு அந்நியனைப் போல்
குடியிருக்க வேண்டியிருக்கிறது.....

யார் வந்தாலும்
அடுத்த வீட்டுக்காரன்
தப்புத் தப்பாய் பார்க்கிறான்
ரத்த உறவுகள் வந்தாலும்
முறைத்துப் பார்க்கிறான்
ஒர் எதிராளியைப் போல்
பயந்து பயந்து  அந்த வாடகை வீட்டில்
வசிக்க வேண்டியிருக்கிறது....

எங்கள் ஊர்களில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த
எங்களுக்கு
வாடகை வீட்டில்
நிம்மதியின்றி உறங்க வேண்டியுள்ளது.
அரசியலைப் போல்
வாடகை வீட்டிலும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்....

வாடகை வீட்டில்
என்ன நடந்தாலும்
எட்டிப்பார்க்காத அந்த வீட்டு உரிமையாளன்
மாத முடிவில்
வீட்டு வாடகைப் பணம் பெற
அதிகாலையிலேயே வந்துவிடுவான்
வாடகை வீட்டில் வசிப்பவர்களும்
உங்களைப் போல்
வாழ்க்கையை நகர்த்தும் மனிதர்கள்தான்......

தலை எழுத்து
தலை நகரில் வாழ வைக்க
வாடகை வீடு மாறி மாறி
வாழ்க்கையும் அலுத்துப் போகிறது
வெறுத்துப் போன வாடகை வீட்டில்தான்
வாழவேண்டியுமிருக்கிறது....

ஒவ்வொரு முறையும்
வீடு மாறும் போதெல்லாம்
சந்தோஷங்களையும்
சோகங்களையும்
பகிர்ந்து கொண்ட
அந்த வாடகை வீடு
துக்கத்தோடு விடை கொடுக்க
நண்பர்களும்-நானும்
மூட்டை முடிச்சுக்களுடன்
இன்னொரு வாடகை  வீட்டுக்கு
புறப்பட்டுப் போகிறோம்
இதுதான் இந்த நகரத்து
வாடகை வீட்டு வாழ்க்கை......

Tuesday, September 20, 2011

உணர்வுத் துளி......


வழமை போல்
நகர மறுக்கும்
உனது ஞாபகங்கள்
இன்று சில நிமிடங்கள்
என்னுடன் முரண்பட்டுக் கொண்டன......
******************

அதிகம் பேசாத
நமது காதல் பற்றி
எப்போதாவது நீ நினைத்ததுண்டா....?
 ********************

காத்திருந்து,ஏமாந்து,கவலைப்பட்டு
முட்டாளாகிப் போன
என்னைப் பற்றி
இனி பாடப் போவதில்லை......
 **********************

நிகழ்ச்சி இல்லாத
அறிவிப்பாளரைப் போல்
அரங்கேற்றம் இன்றியே
அடங்கிப் போகிறது நமது காதல்......
********************

 வெறுக்கப் பட்ட
என் உணர்வுகள் பற்றி
இனி கவலைப் படப் போவதில்லை
அது பற்றி
இனி கவிதை எழுதப் போவதில்லை.....
 *********************

தூரத்தில் நிற்கும் உறவுகள்
துரோகம் இழைக்கும் நட்புக்கள்
குற்றம் சொல்லும் காதல்
மனசும்,மண்ணாங்கட்டியும் என
வாழ்க்கை கழிகிறது......




Monday, September 19, 2011

நீ இல்லாத நேரம்...


நீ என்னை அரவணைத்து
பின்னர் வீழ்த்தி
இன்னுமொருவருடன்
வாழப் புறப்பட்ட போதும்.
கடிகார முட்களாய்
நீ என்னை சுற்றிக் கொண்டேயிருக்கிறாய்.....

வார்த்தைகளால் முட்டி மோதி
நீ என்னிடம் தோல்வியுற்ற வேளை
நமது காதல் வீழ்ந்தது.
அதற்கு பிறகும்
எனது வீட்டு சுவர்க் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ வலம் வருகிறாய்......

நீ விடைபெற்ற
அந்தக் கணத்தில்
பிரியமான ஒருவரின் இழப்பின் பின்னரான சோகமாய்
நான் வீந்து நொறுங்கினேன்
அப்போதும் என் கைக் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ என்னை சுற்றி சுற்றியே
பின் தொடர்ந்து வருகிறாய்.......

Monday, September 12, 2011

பெருநாள் கவியரங்கம்......


நான் தொகுத்து வழங்கிய வசந்த நிலா நிகழ்ச்சியைப்பற்றி தினக்குரல் பத்திரிகையில் ஒரு நேயர் பாராட்டி எழுதியிருந்தார்.அந்த நிகழ்ச்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கிறேன்.கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று பெருநாள் சிறப்பு கவியரங்கம் ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தேன்.அந்த கவியரங்கு பற்றி என் சக அறிவிப்பாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி பேசியிருந்தார்கள்.அந்தக் கவியரங்கம் பற்றி 2011.09.11 ம் திகதி தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில்.ஒரு சகோதரி எழுதியிருந்தார் நான் தயாரித்து வழங்கிய அந்த கவியரங்கத்திற்கு நான் இட்ட பெயர் "பிறைத்தோணியில் பிரயாணம் .செய்பவர்கள்".தினகரன் பத்திரிகையில் வெளியான விமர்சனத்தை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன் வாசித்துப் பாருங்கள்.

வானலை வழியே பெருநாள் கவியரங்கம்.
கடந்த 31.08.2011 நோன்புப் பெருநாள் தினத்தன்று வசந்தம் எப்.எம்.வானொலி வழங்கிய பெருநாள் விருந்தாய் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் தயாரித்தளித்த "பிறைத்தோணியில் பிரயாணம் செய்வார்கள்" என்ற சிறப்பு கவிதை அரங்கு கேட்டு மகிழ்ந்தோம்.
கவிஞர் நஜ்முல்ஹூசைன்,தலைமையில், சுஹைதா கரீம்,முர்ஷிதீன்,ரவூப்ஹஸீர்,கிண்ணியா அமீர் அலி,கவி வாசித்தனர்.நான்கு கவிஞர்களும் சிறப்பாக எழுதியிருந்தார்கள்,சுஹைதா பெண்களுக்காகக் குரல் கொடுத்தர்,முர்ஷிதீன் மத்திய தரைக்கடலில் கப்பலோட்டியவர்கள் பிறைத் தோணியில் பிரயாணிக்கும் அவலம் சொன்னார்.ரவூப் ஹஸீர் சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்க வைத்தார்,அமீர் அலி சத்தத்தோடு மட்டும் வந்தார்.தலைவர் நஜ்முல்ஹூசைன் எல்லோரையும் சிக்கனமாகக் கூப்பிட்டார்.அவர் தொகுப்பு நன்றாக இருந்தது.மொத்தத்தில்,பிறைத்தோணியை எங்கள் செவிகளில் சேர்த்து விட்ட அஸ்கர் பாராட்டுக்குரியவரே..

எழுதியவர்:செல்வி முஸ்னா நிஸாம்
ஏறாவூர்...

( நிகழ்ச்சியை கேட்டு அவதானித்து எழுதிய சகோதரிக்கு நன்றி..)