Tuesday, December 20, 2011

தோழா...


எனக்குள்
சங்கமித்துக் கொண்ட
உன் நட்புக்காய்
என் உள்ளம் படும்பாட்டை
எப்படித்தான் உனக்கு சொல்வேனோ...

பழகிய பொழுதுகள்
பழசு படாமலிருக்கையில்
நாம் பேசிய வார்த்தைகள்
கெட்டுப் போகாமலிருக்கையில்
கண்ட கனாக்களெல்லாம்
பொய்யாக கரைந்தது எப்படி....

நாம் பழகிய நாட்கள்
உனக்கு ஞாபகமிருந்தால்
எல்லையில்லா நேசம் வைத்து
பழகிய என்னை
எப்படி மறப்பாய்...

Thursday, December 8, 2011

பேசாத வார்த்தைகள்...


குழந்தையின் உச்சரிக்கப்படாத வார்த்தைகளாய்
காதலின் மொழியின்றிய உணர்வுகளாய்
வாழ்க்கையின் தூரத்தில் நின்றழும்
குமரியின் பெருமூச்சாய்
குடிசைக்குள் கரைந்து போகும்
கனவுகளின் தொட்டிலாய்
ஆயிரம் ஆயிரம் உணர்வுகள்
பேசப்படாத வார்த்தைகளாய்
எனக்குள்ளேயே உருகிக் கரைகிறது...

Monday, December 5, 2011

ஏனோ புரியவில்லை...


பல கதைகள்
என் மனதில் குவிந்து கிடக்கிறது
உன்னிடம் சொல்வதற்கு
சொல்வதற்காய் உன் அருகில் வரும் போது
வார்த்தைகள் மறுத்தோடுகிறது
ஏனோ தெரியவில்லை...

சந்திக்கும் சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே சொல்லாமல்
மௌனமாய் பிரிந்து போகிறோம்
பல கதைகள் கேட்கத் தெரிந்த நமக்கு
நமது கதையைத்தான் சொல்ல முடியவில்லையே...

எப்படியாவது
உன்னிடம் ஏதாவது சொல்ல எத்தனிக்கும் போது
நான் உன்னிடம் செல்லாக்காசாகிப் போகிறேன்
எப்போதுதான் உன் மடியில் செல்லமாய் அரவணைப்பாயோ...

நீ என்னை கழித்து பார்த்தாலும்
நான் உன்னை சேர்த்துத்தான் பார்க்கிறேன்
நீ எப்படியானாலும்
உன்னை நான் நினைப்பதிலும்
கவிபாடுவதிலும் காலம் கழிகிறது...

Monday, November 28, 2011

கவனிப்பாரற்று...


பூக்களைப் போல்
மென்மையாய் வருடிய காதல்
பாலைவனமொன்றில்
கருகிக் கொண்டிருக்கிறது...

இன்பம் தரும் என்று
காதல் படகில் பயணித்த போது
துடுப்பிழந்து
மெல்ல,மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்க்கையின் கனவுகள்
நிறைவேறாமல் நீண்டு கொண்டே போகிறது
வயது போக ஞாபக மறதி குடி கொள்கிறது
ஆனால்,அவளது நினைவுகள் மட்டும்
குறையவில்லை
அவள் பல கோணங்களில்
என்னை கிளறிக் கொண்டிருக்கிறாள்...

இதயம் தன்னில்
தேக்கி வைத்த காதல்
கவனிப்பாரற்று
உடல் முழுவதும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது...

 நான் எழுதிய
காதல் வரிகள்
வாசிக்கப் படாத
வரலாற்றுப் புத்தகமாய்
மேசையில் கிடக்கிறது....

Tuesday, November 15, 2011

திரும்பிப் பார்...


உன் குரலை கேட்பதற்காய்
நான் தவமிருக்கையில்
நீ பேசாமல் இருப்பது
என்னை வருத்தப்படுத்துகிறது
இந்த குயிலின்  ஓசையின்றி
நாட்கள் கவலையோடு நகர்கிறது...

முகவரி தவறிய
கடிதங்களைப் போல்
உன் கைத் தொலை பேசியும்
என்னிடமே திரும்பி வருகின்றன
விலாசம் தேடி அலுத்துப் போன
தபாற் காரனைப்போல்
உன் இலக்கத்தை பல முறை அழுத்தி
பயனற்றுப் போகையில்
என் விரல்கள் தெலைபேசியிடம் சண்டை பிடிக்கின்றன...

குழந்தையைப் போல்
அடம்பிடிப்பது உன்னிடம்தான்
சில வேளை குழந்தைத் தனமாய்
பேசும் போது தவறிழைத்தால்
உன் மனச்சிறைக்குள் வைத்து
தண்டனை தா
உன்னை விட்டு பிரியும்
சக்தி எனக்கில்லை...

உன் மனசு
என் வார்த்தைகளால்
காயப்பட்டால் மன்னித்துக்கொள்
நீயின்றி வெறிச்சோடிப் போகும்
என் வாழ்க்கைக்கு வசந்தம் தர நீதான் வேண்டும்...

என் கலையாத காதல்
கனவாகிப் போன கதையை
உன்னிடம் இறக்கி வைத்த பிறகும்
ஏன் கோபித்துக் கொள்கிறாய்
கலைகளை நன்கு கற்ற நீ
என் மனக் கவலைகளை
ஏன் புரியாமல் போகிறாய்...

Thursday, November 10, 2011

நீரை எப்படி அருந்துவது...



71 வீதம் நீரால் நிரம்பிய பூமிப் பந்தில் வாழும் நாம்  நீரோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.நீரானது எம் உயிர் வாழ்வுக்கும் ஏனைய தேவைகளுக்கும் மிகவும் அத்தியவசியமானது.அதேபோல் இந்த உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளுக்கும்,மரம்,செடி,கொடி,இன்னோரன்னவற்றுக்கும் நீர் உயிர் நாடி,இறைவனால் இந்த உலக வாழ் உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட உன்னதமான கொடைதான் நீர்,நமக்கு மிக இலவசமாக கிடைக்கின்ற பக்கவிளைவற்ற மருத்துவ  குணம்  கொண்ட இந்த நீர் அதன் இயற்கைத் தன்மையிலிருந்து மாறுகின்றஅல்லது மாற்றப்படுகின்ற போது சில வேளை நமது உயிரையும் குடிக்கிறது.இலங்கையைப் பொறுத்தளவில் தங்கள் வளவுகளில் அல்லது பொதுவாக தோண்டப்பட்ட கிணுறுகளிலிருந்து குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் நீரைப் பெறுவர்.ஆனால் காலம் செல்ல  குடி மக்கள் பெருத்த போது நீர் அசுத்தமடைவதனையும் தவிர்க்க முடியாமல் போனது.இதனால் நமது மூலை முடுக்கெல்லாம் வோற்றர் சப்ளை மூலமாகவே நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த நீரைத்தான் நம்மில் பாவிப்போர் அதிகம்.....

கவிதையில் காதலை பாடிக்கொண்டிருக்கும் நான் ஏன் இப்படியான பதிவை போடுகிறேன் என்று நீங்கள் உங்கள் தலைமயிரை கிள்ளியெடுப்பது எனக்கு புரிகிறது.நான் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்த போது என் கையில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தது.அது மிகப் பெறுமதியான துண்டுப் பிரசுரம் நமதூர்களில் அரசியலுக்கும்.ஒருவனை வம்புக்குயிழுப்பதற்கும்,அடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டு நல்ல சிந்தனையாளர்கள் எழுதிய துண்டுப்பிரசுரம்.நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது பதிவில் பதிவு செய்கிறேன் வாசித்துப் பாருங்கள்...
அந்தப் பிரசுரம் இப்படித்தான் அமைந்திருந்தது
எல்லோருக்கும் இனிய
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

அதிக நீர் அருந்துவோம் ஆரோக்கியம் பெறுவோம்

ஃசாதாரணமான ஒருவர் ஒரு நாளைக்கு 3 லீற்றர் தொடக்கம் 6 லீற்றர் வரை நீர் அருந்த வேண்டும்

ஃ நாளாந்தம் ஒருவர் 6 லீற்றர் அதற்கு அதிகமாக நீர் அருந்துவது    ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

ஃ அதிக நீர் பருகுபவர்களுக்கு பல வியாதிகள் கிட்டவும் நெருங்காது.அத்துடன்  அதிகம் நீர் பருகுவது உற்சாகத்தையும்,மகிழ்ச்சியையும்,முகப் பொலிவையும் தரும்

ஃ குளிர்ந்த நீரைப் பருகுவதைத் தவிருங்கள்.இளம் சூடான நீரை அல்லது சாதாரண நீரையே பருகுங்கள்...


வோற்றர் சப்ளை நீரை அப்படியே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது
வோற்றர் சப்ளை நீரை பருகுமுன் செய்ய வேண்டியவை


01.சிறிது நேரம் கொதிக்க வைத்திருந்து ஆறிய பின் பருகவும்

02உருளையான போத்தலில் அடைத்து 8 முதல் 12 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு செய்து பருகவும்

03.வடிகட்டப்பட்டு குறைந்தது 1|2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து  பருகவும்

04.குறைந்தது 2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து மேலாக எடுத்து பருகவும்

வோற்றர் சப்ளை நீரை பாவிப்பவரா நீங்கள் இதனை கடைப்பிடித்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது


Monday, November 7, 2011

எனக்குள் நீ...


 எனதான எல்லா அசைவுகளிலும் 
உனதான நினைவுகள்தான்
பூக்களாய் மலர்கின்றது...

என் வேலைத்தளத்திலும்
என் தனிமையிலும்
என் மனசுக்குள் பம்பரமாய்
நீ சுழன்று கொண்டிருக்கிறாய் 
ஒரு நிழற் படமாய் 
நீ அடிக்கடி என்னை சந்தித்து போகிறாய்...


ஆறாமல் வேதனை தரும்
சில காயங்களை  
கவிதையில் இறக்கி வைக்க 
பேனாவையெடுத்தால்
உன்னைப் பற்றியதான 
வார்த்தைகள்தான் வருகின்றது
ஆக,உன்னைத் தவிர 
வேறொன்றையும் என்னால்
எழுத முடியவில்லை.


என் பாதையில் 
பாவையொன்று நடந்து போகும் சத்தம் 
நீ நடந்து செல்லும் சத்தமாய்  
என் காதுகளுக்கு கேட்கிறது 
வந்து பார்த்தால் 
எவர் எவரெல்லாம் போகின்றனர் 
ஆனால்,நீ மட்டும் வருவதாயில்லை 
எதிர்பார்ப்புக்களுடன் ஓடி வந்த நான் ஏமாந்து போவேன்
இப்போதுகளில்
என் அக,புற தோற்றங்களில்
உன் விம்பங்கள்தான் காட்சியாய் விழுகிறது...

இத்தனைக்கும் காரணம்
நீ நிலவைப் போல்
தூரமாய் இருந்த போதும் 
நினைவுகளால் தினம் தினம்
என்னை தழுவுகிறாய்...


Wednesday, November 2, 2011

உனக்குத் தெரியுமா..?



ஒரு இரவு
தூக்கம் என் கண்களை
அதிகம் தழுவிய போதும்
உன் வார்த்தையால்
என் விழியோரம்
எண்ணெய் ஊற்றினாய்
அந்த இரவு தூக்கமின்றி
உன் வார்த்தையோடு
கடினப்பட்டுக் கொண்டது...


தமிழை அமுதமாய்
உறிஞ்சிக் குடிக்கும் நீ
அந்த மொழியால்
என் மனதை பலவீனப்படுத்துகிறாய்
வார்த்தைகளால் வெறுக்கும் நீ
வானமளவு பொழியும் அன்பை
உன் மனதுக்குள்
குடை கொண்டு மறைத்து வைத்திருக்கிறாய்...


புறாவைப் போல்
பறந்து திரியும் நீ
உன் நினைவுகளுடன் போராடும்
என்னுடன் சன்டை பிடிக்கிறாய்
உன் ராச்சியத்தில்
சிட்டுக் குருவி போல் அமர வரும் போதெல்லாம்
உன்  விழியின் கற்கள் கொண்டு
என்னை விரட்டுகிறாய்
அப்போதெல்லாம் கண்ணாடியாய்
நொறுங்கிப் போகின்றேன்...


கண்கள் கண்டதெல்லாம்
படம் பிடித்துக் கொள்ள
நான் ஒரு சினிமாக்காரனல்ல
இதயம் தொட்ட உன்னை
கண் கலங்காமல் காக்கும்
உந்தன் காவலன்...


எப்போதும்
பிரிவை வேண்டி நிற்கும் உன்னிடம்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
உன் அன்புக்காய்
தவமிருக்கிறேன்...




Monday, October 31, 2011

வடக்கு முஸ்லிம்


தாய் பிறந்த மண்ணை
முத்தமிட காத்திருக்கையில்
மகனின் சுவாசம்
அடங்கிப் போனது அகதி முகாமில்
தன் சேய்யின் நிறைவேறா  ஆசையுடன்
அவளது கால்கள் சக்தியின்றி
எட்டு மேல் எட்டு வைத்து நகர்கின்றன
சொந்த நிலத்தை தரிசிப்பதற்கு...

வீசப்பட்ட கற்களாய்
ஆங்காங்கே அலைக்கழிகிறது
துப்பாக்கி முனையில்
வெளியேற்றப்பட்ட என் உறவுகள்
தன் வீட்டில்  விளக்கேற்றி வாழ
எத்தனை பிரார்த்னைகளும்,வேண்டுதல்களும்
இந்த பாவப்பட்ட அதிகாரிகளிடம்
எங்கள் வாழ்க்கையைப் போல்தான்
இந்த மீள் குடியேற்றமும்
அரையும் குறையுமாக...

களி மண்ணில் புதைந்த பாதங்களும்
வேளாண்மையில் சிந்திய வியர்வைத் துளிகளும்
பன்னங் கீற்றுக்களில் தவழ்ந்த கதைகளும்
எங்களை சுமந்து நின்ற பள்ளிக்கூடங்களும்
புழுதி கிளப்பி நடந்து திரிந்த தெருக்களும்
பலகாரம் பரிமாறிய உறவுகளும்
காலையும்,மாலையும் காலம் கடத்திய கடற்கரையும்
எங்கள் ஞாபகங்களை சுமந்து நிற்க
கண்ணீருடன் விடை பெற்றோம்
மீண்டும் அவைகளை
ஆறத் தழுவும் கனவுகள்
எப்போது நனவாகும்

 தசாப்தங்கள் தாண்டியும்
முந்தானையை வேலியாக்கி
தெருவோரங்களில் மானங்காத்து வாழ்கிறோம்
தொலைதூரமில்லா
எங்கள் ஊர்கள்
சிலரால் இன்னும் தொலைக்கப்படுகிறது
"தயவு செய்து" என்று விண்ணப்பித்து
அலுத்துப் போய்விட்டது
அப்பாவி முகத்துடன்
எத்தனை முறை அதிகாரிகளிடம் கெஞ்சுவது
எங்கள் நிலத்தை
எங்களுக்கு தருவதற்கே
இட வெளிகள் நீண்டு போகின்றது...

ஆயிரம்தான் தந்தாலும்
மழையில் கரையும் குடிசையாய்
காற்றில் பறக்கும் கூடாரமாய்
வாழ்க்கை கழிகிறது
உங்கள் ஆயிரங்கள் வேண்டாம்
எங்கள் ஆதனப் பூமியில் வாழ வைத்தால் போதும்
எப்போது நாங்கள் போவோம்...
புன்னகைத்த முகங்கள்
நெருப்பாய் வார்த்தைகளை கொப்பளித்தது
எங்களை வெளியேறச்சொல்லி
அன்று அழுதவர்கள்
இன்று முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்
எங்கள் மீள் குடியேற்றத்தில்...
வேரூண்டிய நிலத்தில்
பிடுங்கப் பட்ட
எங்கள் மரங்களையும், விதைகளையும்
எப்போது நடுவீர்கள்...?

Saturday, October 29, 2011

உன்னை பாடும் என் வரிகள்...



எனக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பி
கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருப்பது போல்
என்னை பிடிக்காத அவளின்
கவிதைகளை தினமும் வாசிக்கிறேன்
ஏனெனில் கவிதையில்
நானும் அவளும் ஒரே பல்லவி...

பாடல்களுக்கிடையில்
நான் வாசிக்கும் கவிதையில்
நீ அதிகம் வசிக்கிறாய்
அந்த கவிதையை காதலிப்போர் அதிகம்
ஆனால் நீ காதலிக்கவில்லை
காரணம் கேட்டால்
ஒரு வக்கீலைப் போல்
வாதிடுகிறாய்...

பிடித்த நிகழ்ச்சியில்
பேச வாய்ப்புக் கிடைக்காது
கவலைப் படும் ஒரு தீவிர ரசிகனைப் போல்
உன் அருகிலிருந்து பேச
வாய்ப்பின்றி ஏமாந்து போகிறேன்...

நேயர் விருப்பத்தில்
பிடித்த பாடலை கேட்க
அழைத்து,அழைத்து 
தொடர்பு கிடைக்காமல் 
நொந்துபோகும் நேயரைப் போல்
உன் தொலை பேசி
இயங்காத நாட்களில்
நான் இயங்க மறுத்த பொழுதுகள்
உனக்குத் தெரியுமா..?

கலையகத்தில் 
முணு முணுக்கும் பாடலைப் போல்
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறேன்
உன் அழகான பெயரை உச்சரிப்பதால்
என் குரலும் அழகாகிறது...

என்னை 
பலர் சிலாகித்து பேசும் போது
உன்னை நினைத்து கொள்வேன்
நீதான் சிட்டுக் குருவி போல்
எனக்குள் இருந்து கொண்டு
பலரின் கண்களிலும்,காதுகளிலும்
கொண்டு சேர்க்கிறாய்...

எப்போது
நிகழ்ச்சி கிடைக்கும் என்று
ஆவலுடன் இருக்கும் அறிவிப்பாளரைப் போல்
உன் பதிலுக்காய் காத்திருந்து
நான் ஏங்குவதுண்டு...

கனவுகளுடன்
ஒலி வாங்கியை உயிர்ப்பிக்கும்
புதுமுக அறிவிப்பாளரைப் போல்
ஆயிரம் கனவுகள் எனக்குள்
உயிர்த்தெழுகிறது 
அத்தனை கனவுகளும்
எனக்குள்ளேயே கரைந்து போகிறது...

நான் வரிகளை எழுதுகிறேன்
நீ பாடுகிறாய்
நான் நினைப்பதை நீ சொல்லுகிறாய்
நீ நினைப்பதை நான் எழுதுகிறேன்
நீ பாடல் நான் வரி
நீ பாட மறுத்தால்
என் வரிகளை நான் யாரிடம் கொடுப்பேன்...

Tuesday, October 25, 2011

நீ அப்படியில்லை


நமது உடல்களின்
எங்கே ஒரு கோடியில்
எல்லைகளற்ற பாசம்
குடி கொண்டிருக்கிறது
ஆனால்,முரண்பாடுகளால்
இடவெளியை ஏற்படுத்திக் கொள்கிறோம்...

நானும் நீயும்
ஒத்திசைவற்றவர்களென
நீ அடம்பிடித்து நிற்க
நேர்மையின் கோட்டில்
எனக்குள் ஏற்றி வைக்கப் பட்ட காதலை
அதன் வலியை
எத்தனை முறை
கதறிக் கதறிச் சொல்லியிருப்பேன்...

இருட்டில்,
தலையணையை துணைக்கெடுத்து
அழுது உணர்ச்சிகளை கொட்டுகிறவள்
எனது உணர்வுகளை விலக்கி வைத்து
கல்லாயிருக்கிறாள்...

எனக்குத் தெரியும்
பூனைக் குட்டி மாதிரி
துள்ளித் திரியும்
அவளது வெள்ளை மனதில்
எனக்கான பாசம் இருக்கிறது
ஆனால்,மனச்சாட்சியிடம்
முட்டி முட்டி பின் வாங்குகிறாள்...

அழுகை,தவிப்புக்கள்
இருட்டின் அரவணைப்புக்கள்
என்னைப் போல் உனக்குமுண்டு
ஆனால்,ரோஜாப் பூப் போல்
உடம்பை வைத்திருக்கும் நீ
என்னைப் போல்
எப்படி தாங்குவாய்...



Monday, October 24, 2011

என்னை தாலாட்டும் பூ


எனதான கனவுகள்
கரைந்த போதும்
உனதான ஞாபகங்கள்
கலையாமல் எனக்குள் நீந்துகிறது...

என் உணர்வுகளுக்குள்
முரண்பட்டுப் போகும் உன்னை
முழுமையாய் நேசிக்கிறேன்
என் நெஞ்சுக்குள் வைத்து
கனவு காண்கிறேன்...

இராகமாய் கசியும்
தாலாட்டும் உன் வார்த்தைக்காய்
தவமிருக்கும் இந்த குழந்தை மனதின்
ஏக்கங்களை எப்படி உனக்குச் சொல்வேன்
எனதான எதிர்பார்ப்புக்கள்
என்னிடமே திரும்பி வருகின்றன
வாங்கிக் கொள்ளத்தான் யாருமில்லை...

பாசத்திற்காய்
உன்னைப் பார்ப்பேன்
சொற்களால் என்னை வெறுப்பாய்
உன் ஓரப்பார்வையால் பூத்தூவுவாய்
நீ தூவும் அந்தப் பூவில்
நான் அடையும் ஆனந்தம் உன் மனமறியுமா...?

சந்திப்புக்களை
தவிர்த்துக் கொள்ளும் நீ
ஒரு சந்தர்ப்பம் கொடு
நான் மௌனமாக்கிய வார்த்தைகளை
கொட்டித் தீர்ப்பேன்
உன் இதயம் நனையும் படி...

வலுவிழந்த வாக்குறுதியால்
உன் மனதை காயப் படுத்தவில்லை
தொலை பேசியில் வர்ண ஜாலம் தடவும்
பகட்டுக் காரன் நானல்ல
உயிராக நேசிக்கும் உன்னை
என் மனசுக்குள் வைத்து
வாழ விரும்புகின்றேன்...

நிலவைப் போல்
குளிர்ச்சி தரும் உனக்குள்
மழையாய் நனைய வருவேன்
அப்போது உன் கண்ணம்
சிவந்து போகும் வெட்கத்தினால்...

Saturday, October 22, 2011

எதை நான் எழுத...


ஏதாவது எழுதச் சொல்லி
தினம் அடம்பிடிக்கிறாய்
உனதான ஞாபகங்களை எழுதவா
எனதான ஏக்கங்களை எழுதவா
கடந்த காலம் தந்த வாழ்வின்
காயங்களை எழுதவா
எதைச் சொல்லி நான் எழுதினால்
நீ வாசிப்பாய்...
..................................

Friday, October 21, 2011

விடியலைத் தேடி...



நான் காற்றைப் போல் திரிந்தேன்
பூவைப் போல் நறுமணம் பரப்பினேன்
தண்ணீரைப் போல் பாய்ந்தோடினேன்
பூவாய்,காற்றாய்,நீராய்
இருந்த என் வாழ்க்கை
தேங்கிய நீரோடையைப் போல் அமைதியாகி
பனிக்கட்டியைப் போல் உறைந்து போகிறது
வசந்த விடியலைத் தேடி...
..........................................................

நமதான யுகத்தில்...


விண்வெளிக்கு
புறப்பட்டு ஒரு வீடு கட்டி
குடியிருக்க ஆசைப்படுகிறேன்...
வல்லரசாய் உனக்குள்
வன்மம் நிகழ்த்த நினைக்கப் போவதில்லை...
உன் மனசுக்குள் ஒரு பூவைப் போல்
மென்மையாய் குடியிருக்க விரும்புகிறேன்...
பரபரப்பாய் பறந்து திரியும்
மனிதர்களுக்கு மத்தியில்
அமைதியாய் வாழ
உன்னோடு புறப்பட்டு வருகிறேன்...
...........................................................................

Thursday, October 20, 2011

இனியும் வேண்டாம்...


 மரண பயம்
 உயிரெல்லாம் ஆக்கிரமிக்கிறது...
 சந்தோஷமின்றி
 நாட்கள் நகர்கிறது....
 நிம்மதியின்றி
மனசு அலை பாயுகிறது...
நீதிக்காய்
பாதங்கள் தெருவெல்லாம் திரிகிறது...
வாழ்தலில் விருப்பமின்றி
ஏக்கத்துடன் வாழ்க்கை கழிகிறது...
............................................................................

Wednesday, October 19, 2011

உயிரிலே கலந்து...


அந்தி வானம் கலைந்தோடுகையில்
உன் நினைவுகள் மேகமாய்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உனதான பாசம்
என்னுள் கலைந்து கரைகிறது..

தினம் உச்சரிக்கும் பாடலாய்
என் காதுகளுக்குள் ஒலிக்கிறாய்
நான் எழுதும் கவிதையில்
நிழலாய் வருகிறாய்
நான் நேசிக்கும் புத்தகமாய்
என் மனதுக்குள் வாசிக்கப்படுகிறாய்
உன் புன்னகையைப் போல்
எனக்குள் மகிழ்ச்சியாய்
நீ இருக்கிறாய்...

சில வேளை
அடம்பிடித்தலால் முரண்படுகிறாய்
வார்த்தையின் விலகுதலால்
வெறுத்துப் போகிறாய்
ஆதலால்,உன் வாசமின்றி
நான் வாடிப் போகிறேன்
நான் மலரவும், நீவாழவும்
வரம் கேட்டு நிற்கிறேன்...

Monday, October 17, 2011

நிறமற்ற கனவு...


மறந்து போன
நமது கடந்த நாட்களின் பாடல்
இனி மீண்டும் வரப் போவதில்லை...

மொழிகளை ஊமையாக்கி
உணர்வுகளை ஓரங்கட்டி
சைகைகளோடு பேசிக் கொண்ட போதும்
வலிகள் எதுவுமின்றி
மெதுவாய் பயணித்தது நமது காதல்...

வசீகரமும்,கவர்ச்சியும்
காதலின் படிமங்களுமின்றி
நாம் காதலர்களாக மாற்றப்பட்டோம்
ஆனால்,உலகக் காதல் போல்
நமது காதல் படரவேயில்லை...

துண்டிக்கப்பட்ட
உறவை மீளமைக்க
நாம் வடித்த கண்ணீரின் அளவு
சோகப் பாடலின் இசையைப் போல்
தேங்கிக் கிடக்கிறது என் மனதில்...

சூரியன் உதித்து மறையும் போதெல்லாம்
நான் வந்த உன் தெருவும்
நீ எட்டிப் பார்க்கும் ஜன்னலும்
குரல் எழுப்பும் உன் விழிகளும்
இப்போது முகவரியில்லாதவரினால்
வேட்டையாடப்பட்டுள்ளது...

 உனக்கான பரிசுகள்
உன்னை தேடி வரும் நாட்கள்
வெறுமையாய் என்னை கடந்து செல்கிறது
இப்போதுகனவுகளற்ற பொழுதுகளாய்
ஒவ்வொரு நாளும்
அர்த்தமின்றி பிறக்கிறது...



Tuesday, October 11, 2011

காவல்காரனாய் உன் பூந் தோட்டத்தில்


முழுவதுமாய் அவளை
ரசித்து முடிக்கும் முன்
என்னை உதறிவிட்டுப் போகிறாள்
புன்னகையோடு பார்ப்பவள்
இப்போது முறைத்து பார்க்கிறாள்...

அணைத்துக் கொண்டவள்
அராஜகம் செய்து தூரப்படுத்துகிறாள்
உன்னோடு எப்படி போராடுவேன்
வழியின்றி தடுமாறுகிறேன்
நான் வரைந்த நேர் கோட்டில்
உன் விரல்கள் புள்ளடியிடுகின்றன....

நாட் கணக்கில்
மனதார பேசியவள்
எதிரியைப் போல் தூர நின்று பார்க்கிறாள்
ஒரு விநாடி கொடு
என் நெஞ்சில் இருக்கும்
என் எதிர்பார்ப்புக்களை
உன் மடியில் கொட்டி விடுவேன்...

சந்தோஷங்களை
எனக்குள் உற்பத்தி செய்தவள்
சோகங்களை சொந்தமாக்கி விட்டுப் போகிறாள்
உன்னை அழகாய் வர்ணித்த என் பேனா
இப்போது சோகமாய் கசிகிறது கடதாசியில்...

என்னை புகழ்வதற்கு
நான் நியாயவாதியுமல்ல
உன்னை அசிங்கப் படுத்த
நான் இரக்கமற்றவனுமல்ல
என் உணர்வுகளை மதிக்காத போதுதான்
என்னை உரத்துச் சொல்கிறேன் உனக்கு அவ்வளவுதான்...

உன்னைத் தவிர
நான் நேசித்தவையெல்லாம்
மறந்து போய்விட்டது
இன்னும்
மறக்க முடியாமல் இருப்பது நீ மட்டும்தான்
ஒரு காவல் காரனாய் காத்திருப்பேன்
உனக்காக நான் பாத்தி கட்டிய பூந் தோட்டத்தில்
என்றாவது என்னை
புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்...



Thursday, October 6, 2011

நிஜமில்லா நிழலில்....


வார்த்தைகளை கோர்த்து
உன்னை சோடித்து
உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு விருப்பமில்லை...

வார்த்தைகளின் மாயைக்குள்
மயங்கி விழுந்து
மீள முடியாமல்
போராடும் பலரைப் போல்
நானும் நீயும்
வாழ்க்கையில் இணையாத போது
அந்தப் பாவத்தை எங்கு போய் தீர்ப்பேன்
ஆக.உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு உடன் பாடில்லை...

இனிப்பாய் பேசலாம்
உணர்வுகளை பகிரலாம்
வார்த்தைகளை விழுங்கி
கொஞ்சி மகிழலாம்
கன நேரம் கதை பேசி
காலம் கடத்தலாம்
புல்வெளியில்
நானும் நீயும் உருண்டு புரள ஆசை வரலாம்
இத்தனையும் பொய்யாகின்ற ஒரு நாளில்
நானும் நீயும்
வெறுத்து வாழ்வோம்
ஆக.இனி காதல் வார்த்தைகள் பேசி
 ஏமாற்றுவதில்
எனக்கு இஷ்டமில்லை...

தடுக்கப் பட்டவைகளை
விரும்பும் போது
பலரால் நாங்கள் வெறுக்கப்படலாம்
இல்லாத பொல்லாத  வார்த்தைகளால்
சில நேரம் இகழப்படலாம்
நிஜமற்ற  வாழ்க்கையில்
நிழலாய் பயணிப்பதற்கு
என் மனம் உறுத்துகிறது
உனதான  பாதையில் நீ பயணி
எனதான பாதையில் நான் போகிறேன்...

Thursday, September 29, 2011

கனவில் வரைந்த கடிதம்...

 
வேலை நிமித்தமாக பல வருடங்களாக வெளியூரில் வசிக்கின்றேன்.விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்புகின்றபொழுது,திருமணத்திற்கு பின் சந்திக்கின்ற முதல் பிரிவைப் போல் ஓர் சோகம் என்னுள் குடி கொள்ளும்.
 
 அம்மா,அப்பா,அக்கா.அண்ணா,தங்கை,மருமக்கள்,நண்பர்களிடமிருந்து விடைபெறும் பொழுது ஓரத்தில் நின்று கொண்டு விழி நிறைந்த கண்ணீரோடு என்னைப் பார்க்கும் காதலியின் இனம் புரியாத பாசம் பயணத்திற்காய் புறப்பட்ட என்னை  ஒரு அடியேனும் நகர விடாமல் அந்த இடத்திலேயே கட்டி வைக்கும்.காதலிப்பதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன்.உணர்ந்ததில்லை,இப்போதுதான் என்னை தனிமை தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு காதலின் கட்டுப்பாட்டுக்குள் கடந்து செல்லும் ஒவ்வொரு காதலர்களின் நினைவுகளும் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய்  என் மனக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கின்றன. 
 
காதலைச் சொல்ல உன் தெருவுக்கு வந்த முதல் நாளில் ஏற்பட்ட ஸ்பரிஷத்தில் என் உடல் நடுங்கியது.முதல் வார்த்தையை பரிமாறிக் கொள்வதில் விழிகளுக்கும்,இதழ்களுக்கும் இடையே நடந்த வெட்கப் போராட்டம்,நான் நிமிர்வதும் நீ குனிவதும், நான்குனிந்த பின் நீ விழிகளை உயர்த்திப் பார்ப்பதும்.அந்த அழகிய நிமிடங்கள் என நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

பல மனிதர்களின் உணர்வுகளின் மொழிகளையும்,கணினி நுட்பங்களையும்,கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் காதலின் உனதான வெட்க மொழியை புரியாமல் தடுமாறியிருக்கின்றேன் பல முறை,நீ கண்களை உருட்டுவதும்,மௌனம் சாதிப்பதும்,புன்னகைப்பதும், உன் வெட்க மொழியில் வெவ்வேறு அர்த்தமாமே,எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.


ஒரு நாள் மாலைப் பொழுதில் கண்ணை மயக்கும் சுடிதார் அணிந்து வீதியால் நடந்து வந்த அழகை வண்டுகள் பார்த்திருந்தால் பொறாமைப் பட்டிருக்கும்,மயில்கள் மயங்கி போயிருக்கும்.மழை பெய்து ஓய்ந்த பின் சூடான தேநீர் கோப்பையுடன்,இனிப்பான பலகாரத்தட்டுக்களுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டினாய்.உன் அன்பான தித்திப்பால் அப்போது இனிப்பான பலகாரம் இனிப்பின்றி போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.

வீட்டுக் கூரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் மௌன மொழியை ரசிக்கவேணும்,மிட்டாய்க்காய் அடம் பிடித்து அழும் சிறு பிள்ளையைப் போல் உன்னிடம் செல்லத்தனமாய் அழுவதற்கேனும் முன்னையக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன்...

 பாவம் கனவு பலிக்கவில்லை இப்படி எத்தனை நாட்களுக்கு   கனவில்  கடிதம் எழுதுவது....



Tuesday, September 27, 2011

உன் தூரல் என்னில்.....


நீண்ட இடவெளிக்கு பின்னர்
உலர்ந்து போன  என் மனதில்
மழைத் தூரலாய் விழுந்தாய்
அது கோடைக்கு பின்னரான
மழையாய் என்னை நனைத்தது.....

பூ வாசமாய் மணம் பரப்பும் உன்னை
அமைதியான நதியைப் போல் நேசித்தேன்
ஏக்கங்களுடன் விழுங்கிய
என் காதல் வார்த்தைகளை
சிறு துளியளவு கூட புரிந்து கொள்ளவில்லை
உன்னை சந்தித்து திரும்பும் போதெல்லாம்
ஏமாற்றத்துடன் விடை பெறுவேன்.........

வாழ்க்கை கடலில் பயணிப்பதற்காய்
நான் கட்டிய கனவுக் கப்பல் திசைமாறிப்போயுள்ளது
ஆதலால் என் மனக் கப்பலும் உடைந்து போனது
நீண்ட இடவெளிக்குப் பின்னர்
இப்போதுகளில் உன் பாசத்தை
மழையாய் என் மீது கொட்டுகிறாய்
எப்படி சரி கட்டுவேன்
உன்னால் உடைந்து போன என் மனக் கப்பலை....

 நீ எழுத்துப் பிழைகளுடன்
அனுப்பி வைத்த கவிதைகளை
என் சின்ன வயதுப் புகைப் படத்தை
பார்த்து மகிழ்வதைப் போல்
இப்போதுகளில்
நான் அப்படி மகிழ்வதை தவிர
வேறென்னதான் செய்ய முடியும்...

 நீண்ட நாட்களுக்கு பிறகு
மயிலிறகு வார்த்தை கொண்டு
என் மேனியை நீ தடவினாய்
அது மென்மையாய் என்னை தாலாட்டியது
உனக்குள் நான் இல்லாத போதும்
எனக்குள் நீ எப்போதும் ஞாபகமாய் பயணிப்பாய்....


Thursday, September 22, 2011

வாடகை வீடு....


பல்லாயிரம்
கனவுகள் சுமந்து
வாடகை வீட்டில்
வாழ்க்கை கழிகிறது....

நிரந்தரமில்லா
இந்த வாடகை வீட்டில்
ஒரு அந்நியனைப் போல்
குடியிருக்க வேண்டியிருக்கிறது.....

யார் வந்தாலும்
அடுத்த வீட்டுக்காரன்
தப்புத் தப்பாய் பார்க்கிறான்
ரத்த உறவுகள் வந்தாலும்
முறைத்துப் பார்க்கிறான்
ஒர் எதிராளியைப் போல்
பயந்து பயந்து  அந்த வாடகை வீட்டில்
வசிக்க வேண்டியிருக்கிறது....

எங்கள் ஊர்களில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த
எங்களுக்கு
வாடகை வீட்டில்
நிம்மதியின்றி உறங்க வேண்டியுள்ளது.
அரசியலைப் போல்
வாடகை வீட்டிலும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்....

வாடகை வீட்டில்
என்ன நடந்தாலும்
எட்டிப்பார்க்காத அந்த வீட்டு உரிமையாளன்
மாத முடிவில்
வீட்டு வாடகைப் பணம் பெற
அதிகாலையிலேயே வந்துவிடுவான்
வாடகை வீட்டில் வசிப்பவர்களும்
உங்களைப் போல்
வாழ்க்கையை நகர்த்தும் மனிதர்கள்தான்......

தலை எழுத்து
தலை நகரில் வாழ வைக்க
வாடகை வீடு மாறி மாறி
வாழ்க்கையும் அலுத்துப் போகிறது
வெறுத்துப் போன வாடகை வீட்டில்தான்
வாழவேண்டியுமிருக்கிறது....

ஒவ்வொரு முறையும்
வீடு மாறும் போதெல்லாம்
சந்தோஷங்களையும்
சோகங்களையும்
பகிர்ந்து கொண்ட
அந்த வாடகை வீடு
துக்கத்தோடு விடை கொடுக்க
நண்பர்களும்-நானும்
மூட்டை முடிச்சுக்களுடன்
இன்னொரு வாடகை  வீட்டுக்கு
புறப்பட்டுப் போகிறோம்
இதுதான் இந்த நகரத்து
வாடகை வீட்டு வாழ்க்கை......

Tuesday, September 20, 2011

உணர்வுத் துளி......


வழமை போல்
நகர மறுக்கும்
உனது ஞாபகங்கள்
இன்று சில நிமிடங்கள்
என்னுடன் முரண்பட்டுக் கொண்டன......
******************

அதிகம் பேசாத
நமது காதல் பற்றி
எப்போதாவது நீ நினைத்ததுண்டா....?
 ********************

காத்திருந்து,ஏமாந்து,கவலைப்பட்டு
முட்டாளாகிப் போன
என்னைப் பற்றி
இனி பாடப் போவதில்லை......
 **********************

நிகழ்ச்சி இல்லாத
அறிவிப்பாளரைப் போல்
அரங்கேற்றம் இன்றியே
அடங்கிப் போகிறது நமது காதல்......
********************

 வெறுக்கப் பட்ட
என் உணர்வுகள் பற்றி
இனி கவலைப் படப் போவதில்லை
அது பற்றி
இனி கவிதை எழுதப் போவதில்லை.....
 *********************

தூரத்தில் நிற்கும் உறவுகள்
துரோகம் இழைக்கும் நட்புக்கள்
குற்றம் சொல்லும் காதல்
மனசும்,மண்ணாங்கட்டியும் என
வாழ்க்கை கழிகிறது......




Monday, September 19, 2011

நீ இல்லாத நேரம்...


நீ என்னை அரவணைத்து
பின்னர் வீழ்த்தி
இன்னுமொருவருடன்
வாழப் புறப்பட்ட போதும்.
கடிகார முட்களாய்
நீ என்னை சுற்றிக் கொண்டேயிருக்கிறாய்.....

வார்த்தைகளால் முட்டி மோதி
நீ என்னிடம் தோல்வியுற்ற வேளை
நமது காதல் வீழ்ந்தது.
அதற்கு பிறகும்
எனது வீட்டு சுவர்க் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ வலம் வருகிறாய்......

நீ விடைபெற்ற
அந்தக் கணத்தில்
பிரியமான ஒருவரின் இழப்பின் பின்னரான சோகமாய்
நான் வீந்து நொறுங்கினேன்
அப்போதும் என் கைக் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ என்னை சுற்றி சுற்றியே
பின் தொடர்ந்து வருகிறாய்.......

Monday, September 12, 2011

பெருநாள் கவியரங்கம்......


நான் தொகுத்து வழங்கிய வசந்த நிலா நிகழ்ச்சியைப்பற்றி தினக்குரல் பத்திரிகையில் ஒரு நேயர் பாராட்டி எழுதியிருந்தார்.அந்த நிகழ்ச்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கிறேன்.கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று பெருநாள் சிறப்பு கவியரங்கம் ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தேன்.அந்த கவியரங்கு பற்றி என் சக அறிவிப்பாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி பேசியிருந்தார்கள்.அந்தக் கவியரங்கம் பற்றி 2011.09.11 ம் திகதி தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில்.ஒரு சகோதரி எழுதியிருந்தார் நான் தயாரித்து வழங்கிய அந்த கவியரங்கத்திற்கு நான் இட்ட பெயர் "பிறைத்தோணியில் பிரயாணம் .செய்பவர்கள்".தினகரன் பத்திரிகையில் வெளியான விமர்சனத்தை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன் வாசித்துப் பாருங்கள்.

வானலை வழியே பெருநாள் கவியரங்கம்.
கடந்த 31.08.2011 நோன்புப் பெருநாள் தினத்தன்று வசந்தம் எப்.எம்.வானொலி வழங்கிய பெருநாள் விருந்தாய் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் தயாரித்தளித்த "பிறைத்தோணியில் பிரயாணம் செய்வார்கள்" என்ற சிறப்பு கவிதை அரங்கு கேட்டு மகிழ்ந்தோம்.
கவிஞர் நஜ்முல்ஹூசைன்,தலைமையில், சுஹைதா கரீம்,முர்ஷிதீன்,ரவூப்ஹஸீர்,கிண்ணியா அமீர் அலி,கவி வாசித்தனர்.நான்கு கவிஞர்களும் சிறப்பாக எழுதியிருந்தார்கள்,சுஹைதா பெண்களுக்காகக் குரல் கொடுத்தர்,முர்ஷிதீன் மத்திய தரைக்கடலில் கப்பலோட்டியவர்கள் பிறைத் தோணியில் பிரயாணிக்கும் அவலம் சொன்னார்.ரவூப் ஹஸீர் சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்க வைத்தார்,அமீர் அலி சத்தத்தோடு மட்டும் வந்தார்.தலைவர் நஜ்முல்ஹூசைன் எல்லோரையும் சிக்கனமாகக் கூப்பிட்டார்.அவர் தொகுப்பு நன்றாக இருந்தது.மொத்தத்தில்,பிறைத்தோணியை எங்கள் செவிகளில் சேர்த்து விட்ட அஸ்கர் பாராட்டுக்குரியவரே..

எழுதியவர்:செல்வி முஸ்னா நிஸாம்
ஏறாவூர்...

( நிகழ்ச்சியை கேட்டு அவதானித்து எழுதிய சகோதரிக்கு நன்றி..)

Sunday, August 14, 2011

காத்திருப்பு.........


ஒரு கமராக் காரனைப் போல்
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்
நீதானிருக்கிறாய்........

ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்
ஒற்றைக் கண்ணால்
உன் அழகை ரசிப்பதற்காய்
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன..
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........

என் இதய அறைகளுக்குள்
குடியேறிய உன்னை
தங்கத் தட்டில்  தாலாட்டி மகிழ
ஒரு நகைக் கடையை  தேடித் திரிகிறேன்..
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..
அல்லது என்னை மறந்து
இன்னுமொருவரின் இல்லறத்தை
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?

என் பெட்டிகள் முழுவதும்
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன
பூவாய் இருக்கும் உன்னை
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை
நீ பாலை வனமாய் மாறி
சில நேரம் சுட்டெரிப்பாயோ
என மனம் பதை பதைப்பதுமுண்டு......

உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை
நிரந்தர வாடகை கமராக்காரனாய் 
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?





Monday, August 8, 2011

யார் விட்ட தவறு........

இறை இல்லம்
மனிதர்களால் நிரம்பி வழிகிறது..
அழுதழுது அவரவர் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்...
அதன் வாயிலில்..,
வறுமையின் கண்ணீரோடு
ஒரு இளம் மாது நிற்கிறாள்........

அறிமுகமில்லாத
அத்தனை பேரிடமும்
தன்னை அடையாளப்படுத்தி
கையை நீட்டி கெஞ்சுகிறாள் அந்த இளம் மாது...
அவள் இடுப்பில் ஒரு கைக் குழந்தை
அழுது கொண்டிருக்கிறது........

சில சில்லறைகளுக்காக
வருவோர்,போவோர் எல்லோரையும்
பரிதாபமாய் பார்க்கிறாள்...
சிலர் கொடுக்கின்றனர்...
இன்னும் சிலர் பாவாய் பார்த்துவிட்டு போகின்றனர்
வேறு சிலர் தூரத்தில் நின்று விமர்சிக்கின்றனர்...
ஆனால் அவள் தன்மானம் இழந்து
கெஞ்சி கெஞ்சி கையை  நீட்டுகிறாள்.....

சுமைகளை
சுமக்க முடியாத அந்த இளம் பெண்
ஆயிரம் சுமைகளை சுமந்து கொண்டு
இறை இல்லத்தின் வாசற்படியோரம்
கை நீட்டி காசு கேட்கிறாள்...
ஆயிரமாயிரம் சுமைகளை
அவள் மீது சுமத்தியது யார்...?

தன் தோழிகளுடன்
இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டியவள்
பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்க வேண்டியவள்
தனது காய்ந்து போயிருக்கும்
குடலை ஈரமாக்குவதற்கும்
தன் தோழில் சுமந்திருக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்க தன் மார்பில் பால் சுரக்கவில்லை
நல்லா சாப்பிட்டு நாளாச்சு என்றும்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
அந்த அழகான இளம் பெண்....

அந்த இளம் பெண் அழகாயிருக்கிறாள்
யார் அவளை பிச்சைக் காரியாக்கியது..
சிலர் அவளிடம் போய் விசாரிக்கின்றனர்...
இன்னும் சிலர் தன் இச்சைகளைப் போக்க
அவளை அணுகுகின்றனர்..
வேறு சிலர் விபச்சாரியாக்க முயல்கின்றனர்.....


இல்லாத அவளுக்கு
உள்ளவர்கள் கொடுத்திருந்தால்
இல்லத்திலே தங்கியிருந்திருப்பாள்..
இல்லாத போது இவளைப் போல்
பல சுமையாக்களும்,பாத்திமாக்களும்
இறை இல்லம் என்ன..?
வீதி,வீதியாய் அலைவதை தவிர்க்க முடியாது..
சில நேரம், சில நோட்டுக்களுக்காய்
தன் கற்பையும் வாடகைக்கு விடக்கூடும்......


அந்நிய ஆடவரிடமிருந்து
மறைந்து வாழ வேண்டிய நம் சமுதாயத்தின் கண்
அறிமுகமில்லாதவர்களிடம்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
இப்போது அவள்
பாவம்  பிச்சைக்காரியாய் அடையாளமாகிறாள்..
வாழ்வதற்காய் அவள்
எத்தனை காமுகர்களிடம் போராடப் போகிறாளோ....?


Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......



Monday, July 25, 2011

காத்திருந்த காதல்


சித்தீக்கின் மூத்த மாமாவின் மகள்தான் ஷாமிலா.அவள் தனதூரிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் படித்துக்கொண்டிருந்தாள்.ஷாமிலா அவளது தாய் தந்தைக்கு கடைக்குட்டி,இதனால் அவள் வீட்டில் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தாள்.இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிகம் பற்றுள்ளவள்,அழகானவள்,அன்பானவள்,இவள் விழிகளை உருட்டி,உருட்டி பேசும் போது கண்களை பார்த்துக் கொண்டு,வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.அவளது பண்புள்ள குணத்திலும்,அழகிலும் மயங்கிய சித்தீக்,அவள் மீது காதல் கொண்டான்...

ஷாமீலா மனைவியாக எனக்கு கிடைத்துவிட்டால்,என்னை விட அதிஷ்டாசாலி வேறு யாரு இருக்கமுடியும்,காலமெல்லாம் இவளை கண்கலங்காமல் காப்பேன்.வண்ண வண்ண சாரி உடுத்து அலங்கரிப்பேன்.இவ்வாறு கற்பனைகள் கலந்த கனவுகள் அவனுக்குள் முளைவிடத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல,சித்தீக் காதல் பித்தனாக மாறினான்.தனக்குள் ஏற்பட்ட காதல் உணர்வுகளை அவளைக் காணும் போதெல்லாம் அங்க அசைவுகள் மூலம் வெளிபபடுத்துவான்.ஆனால் ஷாமீலா கண்டும் காணாமலும் போவாள்.இப்படி போகும் அவள் ஒரு வேளை என்னை விரும்பாவிட்டால்,.எந்நிலை என்னாகும். என்ற அச்சம் கலந்த சந்தேகம் அவனுக்குள் சதாவும் எழத்தொடங்கியது.இனிமேல் தனது காதலை தாமதப்படுத்தக்கூடாது என்று எண்ணிய அவன் நேரடியாக அவளது வீட்டுக்குச் சென்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான்....ஷாமீலா,சித்தீக்கின் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,அவளால் காதலிக்கத்தான் முடியவில்லை,வீட்டில் தான் கடைசிப்பிள்ளை.என் தாய் என்னை படிக்க வைத்து பெரியாளாக்கி பார்க்க ஆசையாகயிருக்கிறார்.அதனை தான் நிறைவேற்ற வேண்டும்,படிக்கும் போது காதல் வந்தால் எப்படி படிக்கமுடியும்,அப்புறமா பார்ப்போம் என்று அவனது காதலை நிராகரித்தாள் ஷாமீலா...

ஆனால், சித்தீக் அவளை விட வில்லை,அவள்தான் அவனுக்கு உலகமே காலப்போக்கில் அவள் கிடைக்காவிட்டால்,நான் எப்படி வாழ்வேன்.அவளில்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.அவளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உருக்குலைந்து போனான்...இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது அவன் அந்த இடவெளிக்குள் அவளுக்கு 50 கடிதங்கள் அனுப்பியிருந்தான்.ஆனால் அவளோ ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை.இதனால் அவன் மனம் நொந்து போனான்....


அவளது மனதில் என் காதலை எப்படி புரிய வைப்பது.சரி இன்னொரு தடவை அவளது வீட்டுக்குச் சென்று தன் காதலை புரியமளவுக்குச் சொல்லிப்பார்ப்போம் என்று எண்ணிய அவன் தனது துவிச்சக்கர வண்டியை மிதித்துக் கொண்டு அவளது வீட்டுக்குப் புறப்பட்டான்.எதிபாராமல் வந்து நிற்கும் சித்தீக்கை கண்டதும் ஷாமீலா திடுக்கிட்டாள்.கதிரையில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து வந்து,என்ன திடீரென இந்தப் பக்கம்,நான் தானே சொன்னேன் காதலிப்பதில்லை என்று, மீண்டும் மீண்டும் என் பின்னால் வராதே என்றாள்.அதற்கவன், ஷாமீலா கொஞ்சம் பொறுங்க,இஞ்சப் பாருங்க உங்க நிலமையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனா என்னுடைய நிலமையை நீங்க புரியனும் அதற்காகத்தான் வந்தேன்.என்று ஆரம்பித்தவன்.....
வானம் பூமியை காதலிக்கிறது,சூரியனை சூரிய காந்தி காதலிக்கிறது,தென்னங் கீற்றுக்களை தென்றல் காதலிக்கிறது,வண்டு பூவை காதலிக்கிறது,மிருகத்தனமாய் வாழ்ந்தவர்களை காதல் நல்ல மனிதர்களாய் மாற்றியிருக்கிறது..இப்படியிருக்கும் போது உன்னை நினைத்து உருக்குலைந்து போயிருக்கும் என்னை நீதான் சரிப்படுத்தவேண்டும்.பீளிஸ் என் காதலை ஏற்றுக் கொள்ளுங்க,இல்லாவிட்டால் என்னைக் கொல்லுங்க என்றான்....சித்தீக் மூச்சு வாங்கி வாங்கி பேசுக்கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஷாமீலா,அவனது கன்னத்தில் அறைவதைப் போல் திடீரென சொன்னாள் தயவு செய்து வீட்டை விட்டு போங்க,எனக்கு உங்கள புடிக்கல்ல.. ஒரு நிமஷம்கூட இங்க இருக்க வேணாம் என்றாள். இதைக் கேட்ட அவன் இடி விழுந்ததாய் அதிர்ந்து போனான்,இனியும் அந்த இடத்தில் நிற்கக்கூடாது வேகமாக துவிச்சக்கரவண்டியை மிதித்துக் கொண்டு தனது வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டில் இருக்கும் கட்டிலில் தூங்கியவாறு யோசிக்கிறான்.சித்தீக்கின்
நினைவுகள் முழுவதும் ஷாமீலாதான் வருகிறாள்.எப்போதாவது அவள் தனக்கு கிடைப்பாள் என்ற எண்ணத்தில் மனதை திருப்திப்படுத்திக்கொள்வான்.இப்படியாக அவனது நினைவுகளும்,திருப்திப்படுத்தலும் நகர, காலங்கள் வேகமாய் உருண்டோடியது அவள் பல்கலைக்கழகத்தில் இப்போது படிக்கிறாள் பல்கலைக்கழகம் சென்றவள் அங்கு சக பல்கலைக்கழக நண்பனை காதலிக்கலானாள்.இந்த விடயத்தை தெரிந்து கொண்ட சித்தீக்கின் இதயம் ஒரு கணம் நின்றுபோனது.....அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை,ஏங்கி ஏங்கி அழுதான்,ஆம், அவன் யாருக்காக ஏங்கித்தவித்தானோ,எந்தக் காதலுக்காக காத்திருந்தானோ அந்தக் காதல் அவனிடமிருந்து நழுவிப்போய் விட்டது.
அவனுக்கு அந்தக் காதல் கொடுத்த துன்பம் கடல் அலையைப்போல் தொடர்ந்தது.அதனால் பாதிக்கப்பட்ட சித்தீக்,ஏனோ தானோ என வாழ்ந்தான்,ஒழுங்காக உடுத்துக்கொள்வதில்லை போதைக்கு தன்னை அடிமையாக்கினான்.இதனால் அவனது வாழ்வு சீரழிந்து போனது...........

( இந்த சிறு கதை நான் உயர்தரம் படிக்கின்றபோது எழுதியது )


Sunday, July 10, 2011

நீ இல்லாத போது........

நீ இல்லாத இரவு..
கனவுகளுடன் போராடி..
தோற்றுப் போகிறது...
உன் முகம் காணும் ஆவலில்..
பொழுது விடிகிறது..........

உன்னோடு வாழ்வதாய்...
கற்பனையில் மிதந்து..
மனசு இறக்கை கட்டி பறக்கிறது...
உன் பெயர் சொல்லலும்...
உன் முகம் நினைத்தலுமாய்...
காலங்கள் நகர்கிறது...
காலம் சுமந்த வலியாய்...
உன் நினைவுள் இருக்குமென...
மனசு நோகுகிறது...

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்...
உன் தெருவுக்கு வருவேன்...
நீயிருக்கமாட்டாய்...
நீ எட்டிப்பார்க்கும்  ஜன்னல் பூட்டப்பட்டிருக்கும்...
நீ இல்லாத சோகத்தில்...
மனசு வெறுமையாகிப் போகும்....
முகவரி தர மறந்து...நீ எந்த தேசத்தில் வசிக்கிறாய்......

நீ எனக்குள் காதல் மொழி பேசிய போது...
வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்...
நீ விலகிய போது...
வாழ்க்கை வெறுத்துப் போனது...
உன்னோடு கை கோர்த்து....
ஆனந்தமாய் கழித்த நாட்கள்...
இப்போது அழுது கழிகிறது....

இப்போது நீ...
என்னை மறந்து...
என் காதலை தூரமாக்கி...
இன்னுமொருவருடன் சுகமாய் வாழலாம்...
நான் உன் நினைவுகளை சுமந்து....
போராடி..போராடி..தோற்றுப் போகலாம்........


ஒரு நாள் வரும்...
அப்போது என் நினைவு உனக்கு வரும்...
நீ என்னைத் தேடி வருவாய்....
அப்போது உனக்காய்  தூக்கம் தொலைத்த விழிகளும்...
என் கண்ணீரை தாங்கிய தலையணையும்...
சாட்சி சொல்லும்...........

Saturday, July 9, 2011

சொல்ல மறந்த கதை......


சூரியன் நடு உச்சிக்கு வந்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மதிய நேரம் அது...புலுக்கம் அதிகமானதால்.என் உடல் முழுவதையும் வியர்வை நனைத்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து மீள்வதற்கு என் வீட்டுப்பக்கம் இருக்கும் ஆற்றுப்பக்கம் போனேன்.என் அம்மாவின் அப்பா  நட்டு வைத்த  தென்னை மரம் ஆற்றுப்பக்கமாய் சாய்ந்து கிடக்கிறது.சட்டையைக் கழற்றி புற் தரையில் வீசிவிட்டு,அந்த தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டேன்.நன்றாக வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆற்று நீரில் மிதந்து வர, என் உடம்புக்கு குளு குளு என்று இருந்தது.உடல் களைப்பும்,கவலையும் மறந்து தூக்கம் கண்களை தழுவிக் கொண்டிருக்கையில்,என் அம்மாவின் அப்பா என் ஞாபகத்திற்குள் வருகிறார்.என் சிறு வயதில் மிட்டாய் வாங்கித் தந்து,துவிச்சக்கர வண்டியில் என்னை சுமந்து கொண்டு ஊர் சுற்றிய,அம்மாவின் அப்பா,ஒரு நாள்,இந்த மரத்தடியில்,இது போன்றதொரு மதியப்பொழுதில் காற்று வாங்க வந்த போதுதான் இறந்து போனார்.
அவர் அதிகம் உடல் பலம் கொண்டவர்.தெலாந்து காலை தனியாக தூக்கி வைப்பார்.நாலுபேருக்கு தனியாக நின்று,தாக்கக்கூடிய பலம் கொண்டவர்.இப்படி இருந்த அந்த மனிதர்,இந்த ஆற்றங்கரையோரம்,இந்த தென்னை மரத்தடியில் காற்று வாங்க வந்தபோதுதான் இறுதி மூச்சைவிட்டர்.காற்று வாங்க ஆற்றுப்பக்கம் போன எனக்கு வியர்த்துக் கொட்டியது...ஆக காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாதவைதான்நமது உயிர்......


(... "சொல்ல மறந்த கதை" என்ற தலைப்பில்."வசந்த நிலா" நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காய். நான் எழுதிய பிரதி....சொல்ல மறந்த கதை நிகழ்ச்சி இடம் பெறாததால்,அதற்காய் எழுதப்பட்ட பிரதியை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன்....)

Tuesday, July 5, 2011

குஞ்சு பொறியா கனவுகள்......

என் மீதான...
ஆயிரம் கனவுகளை..
அடைகாத்து வைத்திருக்கிறாய்...
உனதான கனவுகள் ...,
குஞ்சு பொறிக்கும் நாளுக்காகவும் காத்திருக்கிறாய்...
உன் கனவுகளையும், காத்திருப்புக்களையும்,
அலங்கரிப்பதற்கு என்னால் முடியாமல் தவிக்கிறேன்..
பாவம் நமது காதல் இடையில்..,
மரணித்துப் போகும் என்பதை அறியாமல் ..
கனவுகளுடன் பயணிக்கிறாய்....

வாழ்க்கையின்...
எல்லா நிறங்களையும் கொண்டு..
உன்னையும்,என்னையும்.அழகுபடுத்த..
என்னிடமிருக்கும் தூரிகையை கேட்டு....
தினம் அழுகிறாய்...
தரமுடியாமல்..உறவுகள்  என்னை தடுக்கின்றன...
நீ கனவு காணும், வாழ்க்கையின் அத்தனை ஓவியங்களும்..
இடை நடுவே சிதைந்து போகும் என்பதை அறியாமல்..
உன் கனவுகளுடன், என்னை சுமந்து செல்கிறாய்.....


நீ எனக்கு கிடைக்க வேண்டிய அழகான  பூ....
இந்தப் பூவை  அணைத்துக் கொள்ள தெரியாமல்....
தினம்..தினம்..தவித்துக் கொண்டிருப்பதை..
உன் மனமறியுமா...?
உன்னை பூஜிக்க முடியாமல்..
என் மனசு வெறுமையாகிறது...
நானும்..நீயும்..இணையமுடியாத வாழ்க்கையில்..,
கனவுகளுடன் பயணிக்கிறாய்.....

உன் சிறு புன்னகையில்...,
என் மனசை அள்ளியெடுத்தவள்..
சிறு துளி கண்ணீரில்....,
ஆயிரம் கதைகள் சொல்பவள்....
என் கண்ணீரும்,புன்னகையும் உனக்குத்தான் என ஒப்பந்தம் செய்வாள்..
பாவம்..ஒப்பந்தம் தூக்கி வீசப்படும் என்பதையறியாது,
வாழ்க்கையின் கனவுகளுடன் பயணிக்கிறாள்...

இன்னுமொரு இதயமாக எனக்குள் வந்தவள் நீ....
ஆனால்,பொருத்தமில்லா சோடிகளென....
சிலர் சாபமிடுகின்றனர்..உன்னையும்,என்னையும்..
சாபங்கள் பலமாக பிரார்த்திக்கப்படுகையில்.,
நான் நசுங்கிப்போகிறேன்..
உன்னை அணைத்துக் கொள்ளமுடியாமல்..,

வாழ்க்கையின்.,
ஆயிரம் கனவுகளுடன் நீ பயணிக்கிறாய்....
அந்தக் கனவுகளை அலங்கரிக்க முடியாமல்..,
நான் தவிக்கிறேன்.....

Thursday, June 23, 2011

ஒலுவில் ஆய்வரங்கு

தமிழ்..என்று பலமுறை நாவைப் புரட்டுங்கள், 'அமுது' என்று படும்,அதேபோல் 'அமுது' எனப் பலமுறை உச்சரியுங்கள் 'தமிழ்' என்று படும்.அதனால்தானோ பாரதிதாசன் 'தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்' என்றாரோ,

இப்படியாக தமிழ்க்கனியின் சுவை பிழிந்த சாறை சுவைக்கவென அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பெருவிழாவின் முன்னோடியாக ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆய்வரங்கு காலையில் ஆரம்பமானது.பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யூ.எல்.அஸீஸ் அதிதியாகக்  கலந்து சிறப்பித்தார்.(இவர் இப்போது கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகயிருக்கிறார்.)

ஆய்வுக்கு காத்திரமான மூன்று தலைப்புக்கள்               எடுத்துக்கொள்ளப்பட்டன.அத்துறையில் அப் பிரதேசத்தில் தேர்ந்த வளவாளர்களால் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தென்கிழக்கின் தேனமுதக் கவிநாதமாம். நாட்டார் இலக்கியமும்,படித்தவர்களும்,பாமரர்களும் பாகுபாடின்றி பேசுகின்ற பிரதேச மொழி வழக்காறுகள், முஸ்லிம்களிடத்தில் இன்று அருகி வருகின்ற குடிவழிப்பாரம்பரியம் என்பன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பேசு பொருள்கள்.மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந் நிகழ்வில்,நாட்டார் இலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நாட்டார் பாடல்களை மிகச் சிரமப்பட்டு தேடி எடுத்து ஆய்வு செய்து நூலுறுப்படுத்தியுள்ள எஸ்.முத்துமீரான் முன்னிலையில். ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.

எஸ்.முத்துமீரான் தன் முன் குறிப்பில் ,தயவு செய்து நாட்டார் பாடல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.கிராமிய இலக்கியம் என்று சொல்லுங்கள்.இந்தப்பிராந்தியத்தில் இலக்கிய ஆய்வாளர்கள் என்று சொல்பவர்கள் கிராமிய இலக்கியத்தில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர்.என்றும் அங்கலாய்த்தார்.மேலும் தாலாட்டுப்பாடல்கள்,வாழ்த்துப்பாடல்கள் என்பனவும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையான அத்தனை வாழ்க்கைக் கோலங்களையும் சித்தரித்துக் காட்டுகின்ற நாட்டார் இலக்கியங்களை மிகவும் இலாவகமாகவும்,தெளிவாகவும் நகைச்சுவை ததும்பும் வகையிலும் தனது ஆய்வில்,ஆசிரிய ஆலோசகர்    என்.சம்சுத்தீன் முன்வைத்தார்,நகைச்சுவைப்பாடல்கள்,நையாண்டிப்பாடல்கள்,காதல் பாடல்கள்,வாதுகவிகள்,அல்லது வசைப்பாடல்கள்,தூதுப்பாடல்கள்.இறைவனிடம் பிரார்த்திக்கும் பாடல்கள்,அவலத்தை இறைவனிடம் ஒப்புவிக்கும் பாடல்கள்,திரட்டுப்பாடல்கள்,என்பவற்றை ஆய்வாளர்,ரசனைக்குகந்த விதத்தில் வழங்கினார்.அதன் பாடல்களை இஹ்சான் பாடியதும்,கிராமியச் சூழலுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது.
இரண்டாவது அமர்வாக,பேச்சு மொழி வழக்காறு எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலமுனை பாறூக் முன்னிலையில் ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.பாலமுனை பாறூக் தனது முன் குறிப்பில், மனிதன் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஊடகமே மொழியாகும்.காதலன் காதலியிடம் கண்களால் பேசுகிறான்.தாய் மகளிடம் உதடுகளால் பேசுகிறாள்.இதனை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.வாயைத் திறந்து பேசுகிற போது கட்டாயம் மொழி தேவைப்படுகிறது.இதுதான் ஒரு மனிதனை மொழி ரீதியாக அடையாளப்படுத்துகிறது.ஆக,மனிதனுக்கு மொழி விழி போன்றது என்றார்.

ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது 'கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்'இந்தத் தமிழ் மொழி நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசமாகப் பேசப்படுகிறது.ஒருவர் பேசுகின்ற போது ,அவரது ஊரை அடையாளம் கண்டுகொள்ளலாம்.பொதுவாக கிழக்கு மாகாணத்தவர்கள் பேசுகின்ற தமிழ் நாடகப்பாங்கானது,என்று கூறிய அன்புடீன்.மிகவும் தெளிவாகவும் காத்திரமாகவும்,மொழி வழக்காற்றினை மூன்று வகையாக வகுத்துக் கூறினார்.
01.உறவு முறை
02.மதச் சடங்கு முறைகள்
03.உணவு வகைகள்...
இவ்வாறு பிரித்து ,இதில் இப்பிரதேச மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களையும்,பேசுகின்ற விதங்களையும் முன்வைத்தர்.

மூன்றாவது அமர்வாக கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதேச குடிவழிப்பாரம்பரியம் எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அப்துல் லதீப் முன்னிலையில், தென் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் எஸ்.எம்.ஐயூப்  தனது ஆய்வினைச் சமர்ப்பித்தார்.அப்துல் லத்தீப் தனது முன் குறிப்பில், குடி என்பது தமிழர்களின் ஒரு பகுதியினரான முக்குவரில் இருந்து வந்தது எனவும்,ஆய்வாளர் ஐயூப் இந்தத் துறையில் சிறந்த முறையில் ஆய்வு செய்யக்கூடியவர்.சமூகவியல் துறை விரிவுரையாளராக இருப்பதனால்,இதனை சமூகவியல் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆய்வாளர் ஐயூப் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது,முக்குவரை  திமிலர் தொல்லைப்படுத்திய போது முக்குவர் முஸ்லிம்களின் உதவியினை நாடினர்.முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்தனர்.எனவே முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்ததனால்,முக்குவரின் பாதுகாப்புக்காகவும்,உதவி செய்வதற்காகவும்,தங்களது பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.இதன் மூலமாக குடிவழிப்பாரம்பரியம் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியது என்றார்.


குடிக்குத் தலைமை வகிக்கின்ற மரைக்காயர்மார்கள் காலப்போக்கில் சமூர்த்தி முத்திரை பெற்றதனால், மக்களிடத்திலிருந்த செல்வாக்கு வெகுவாக இழந்து வந்தது.ராசாம்பிள்ளை குடி,வெள்ளரசன் குடி,என்பன இன்று தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகவும்,குடிகளின் வகைகளையும் அது முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிய முறைகளையும் தெளிவாகவும்,ஆழமாகவும் ஆய்வினை முன்வைத்த ஆய்வாளரின் கருத்துக்கள் சபையோர்களைக் கவர்ந்தது.

பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் உரையாற்றுகையில்,ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை மிகச் சிறப்பாக முன்வைத்ததனை அவதானிக்க முடிந்தது.ஆனால்,நாட்டார் இலக்கிய பாடல்களுக்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது.ஏனெனில் முஸ்லிம்களுக்கென தனித்துவமான இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது.மற்றும் அவர்கள் மாத்திரம் கவி பாடினார்கள் என்பதனை முற்றாக மறுக்கிறேன்.நான் நேரடியாக சென்று கள ஆய்வினை மேற் கொண்ட போது இறக்காமத்தைச் சேர்ந்த மீரா உம்மா பாடியிருப்பதை என்னால் அறியமுடிந்தது.என்றார்.குடியானது ஒருவரை அந்தஸ்துப்படுத்தும்.அதன் மூலம் அவர், பெருமை,மமதை என்பன கொள்வதற்காகவோஅல்ல,மாறாக குலங்களாகவும்,கோத்திரங்களாகவும் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிப்பாரம்பரியம் காணப்படுகிறது.இருந்த போதும் இன்று கணிசமான முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அவை மறைந்து வருகிறது.என்றார் பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ்....

இவ்வாறு ஆய்வுகளும்,அவதானங்களும் முடிவடைகின்ற போது நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது.மிகவும் ஆழமாகவும்,சுவையாகவும்,காத்திரமாகவும் நகர்ந்து சென்ற ஆய்வில் சில குறைபாடுகளும் இருந்தன.நாட்டார் இலக்கியம் சம்பந்தமாக எஸ்.முத்துமீரான் ஆவேசப்பட்டதையும்,அங்கலாய்த்ததையும்,சிலரைக் குற்றம் சாட்டியதையும், அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்..அந்த ஆய்வரங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் அநேகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவர்கள்,இதனால் அட்டாளைச் சேனை பிரதேசத்திலே வளர்ந்து வரும் கலைஞர்களும்,இலக்கிய ஆர்வலர்களும் அங்கு அழைக்கப்படாமை பெரும் குறையாக இருந்தது.அவர்களையும் இனங்கண்டு ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....
சிலர் வலிந்து  அழைக்கப்பட்டதைப் போன்று ஆய்வின் போது பின்வரிசையில் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கதிரையை விட்டு எழும்புவதும்,வெளியே போவதும்,வருவதுமாகவும் இருந்தனர்.ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர்களை கருத்தில்; கொண்டு  அழைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால்,ஆய்வு காத்திரமாகயிருந்திருக்கும். மற்றும் அந் நிகழ்வினை ஒரு விடுமுறை தினத்தில் நடத்தியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், இப்பிரதேசத்தில் பல வருடங்களுக்குப் பின்னர்,இது போன்ற கலாசார விழாவினை மிகச் சிரமப்பட்டு ஏற்பாடு செய்த பிரதேச செயலகம்,பிரதேச கலாசார பேரவை என்பவற்றை பாராட்டத்தான் வேண்டும்.கலைகளையும்,கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை வருடா வருடம் நடத்த வேண்டும்.....

( இது,2007.12.16 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை )


Tuesday, June 21, 2011

காற்றலையில் பேசிய கவிதை......

தாலி கட்டி உனக்கு விலங்கிடவில்லை...
தாலி கட்டி உனக்கு சிறகுகள் தந்திருக்கிறேன்....
தாராளமாய்...நீ..விரிக்கலாம்.....

******************
கண்ணீர் சிந்தினேன்...
அது மழையாகப் பொழிந்தது...
காதலை தூவினேன்..
அது நிலவாக குளிர்ந்தது.......

**************


நீ இரவுகளின் ஒளியா..
அல்லது என் வாழ்வின் அமாவாசையா....
நீ என் கனவுகளின் நினைவா...
அல்லது என் வாழ்வின் புகைப்படமா....
நீ  என் எதிர்காலத்தின் தோரணங்களா....
அல்லது என் இளமையின் ரணங்களா.....?

*********************
தீக்குச்சி பற்றிக்கொண்டால்,
காற்று அணைத்துவிடும்...
நம் பார்வை பற்றிக் கொண்டால்...,
யார்தான் உண்டு அணைப்பதற்கு......

**********************
அவதாரங்களையும்,தீர்க்கதரிசனங்களையும்..,
பெறுகிறவள் நீ.......
அவமானங்களையும்,தரித்திரங்களையும்...
பெறுகிறவன் நான்......

***********************
இமைகளால் மூடிக் கொள்ளும் விழிகளையும்..,
உதடுகளால் போர்த்திக் கொள்ளும் வார்த்தைகளையும்..,
மறைத்து வை.......
ஆனால்,உன் மனக்கதவை எனக்காக திறந்து வை.......

**********************
உன்னை தேடுகிறேன்....
எந்தத் தேசத்தில் இருக்கிறாய்...
நிரந்தரமில்லா பிரிவில் முகவரியை தொலைத்திருக்கிறாய்..
சிறகுகளை கட்டிக்கொண்டாவது உன்னை சேர்வேன்
அந்த நம்பிக்கையோடு நானிருக்கிறேன்......

**********************
கண்களை இறுக மூடிக்கொண்டாலும்...
காதலின் இறுக்கம்....
என் நெஞ்சுக்குள் சுடர்விட்டெரிகிறது...
அதை உன் மனமறியுமா...?

***********************
நீ வந்த போது..,
வாழ்வுக்காய் போராடிய மனம்..,
நீ போன பிறகு..,
வாழ்வு மரணத்திற்காய் போராடுகிறது.....

********************
கனவுகளை சுருட்டிக்கொண்டு..,
இரவுகள் விடிவதை விட..
நான் உன் விழிகளில் விழும் வரை..
விடியாத இரவுகளாகயிருக்கட்டும்.......

**********************
சந்தோஷங்களால் சங்கீதம் இசைக்கும் நீ....
உன்னை பார்க்கத் துடிக்கும்..
என் மனதின் சோகம்..
என் இசைத் தட்டுக்குள் ஒலிப்பதை உன் மனமறியுமா..?

**********************
நானும் நீயும்
வாழ்க்கைச் சமூத்திரத்தில்..,
கரையில் இருந்து நீச்சலடிக்கிறோம்..
பாவம்..,வாழ்க்கை எட்டாத தூரத்தில்..
உனக்கும் எனக்கும்.....
********************
அந்திப் பொழுதில்..,
நிழல்கள் நீள்வதைப் போல்..
நீயில்லாத இரவுகளில்...
உன் நினைவுகள் என்னுள் நீள்கிறது.....

*****************
நான் கரையில் நின்றழுது...
காதலைத் தேடினேன்....
நீயோ..,கடலில் குதித்தல்லவா.
காதலை நீக்க நினைக்கிறாய்.....

**********************
இரவுகளின் தாலாட்டில்...
உறவுகள் தூங்கியிருக்க...
அந்த இரவுகளிலும்..
நாம் முரண்பட்டுக் கொள்கிறோம்.......
******************
உன் இதயத்தை..,
பூந்தோட்டமாக வைத்திரு....
அதில் வண்டாக..,
நான் வருவேன்...காத்திரு......

********************

(...வசந்தநிலா நிகழ்ச்சியின் போது பாடல்களுக்கிடையில் நான் சொன்ன கவிதைகள் இவை..,
இரவுகளைத் தாலாட்டும் அந்த இரவுகளில் அதிகம் சோகப்பாடல் ஒலிபரப்புவதால். அதற்கான கவிதைகளும் சோகமானவைதான்...வாசித்துப்பாருங்கள்.....)

Monday, June 20, 2011

உனதான வழியில்.......

பாசம் காட்டத் தவறியதில்லை...
பாதை விலகும் போது கண்டிக்கத் தவறியதுமில்லை...
பிரியாமல் பலதை புரியவைத்தாய்..
பலர் போற்றும் வாழ்வை படிப்பித்தாய்....அதனால்,
பாசமுடன் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம் தந்தையே....!

பிஞ்சு நான் தின்னையில் தவழ்கையில்...,
அள்ளியெடுத்து உச்சிமோர்ந்து கொள்வாய்..
மிட்டாய்க்காய் அடம்பிடிக்கையில்...
மிரட்டாமல் வாங்கித் தருவாய்...
காற் சட்டையோடு ஓடி விளையாடும் போது..,
கவனமாய் பார்த்து நிற்பாய்...

ஏடுகள் படித்து வாழ்வில் உயர..,
ஏணிப்படியாய் இருந்தீர்கள்...
கை பிடித்து பள்ளிக்கு கூட்டிப்போனீர்கள்..,
விரல் பிடித்து எழுதப் பழக்கினீர்கள்...
நெறி தவறா வாழ்வைச் சொல்லித் தந்தீர்கள்....
ஐவேளை தொழுதிட பள்ளிவாசலுக்கும் அழைத்து போனீர்கள்...
எங்கள் வாழ்வில் வெற்றிபெற பாலமாய் இருந்தீர்கள்..
அதனால்..,பத்திரமாய் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம்...தந்தையே....
பண்புடன் நீங்கள் வாழ்வதால்..,
பாசத்தோடு பார்ப்போர் பலர்..
பண்பு தவறக்கூடாது என்பதற்காய்..
ஒழுக்கமாய் வாழப்பழக்கினீர்கள்..
அதனால்..அடக்கமாய் வாழக்கற்றுக்கொண்டோம்.....




வறுமை எங்களை சூழ்ந்த போது..,
எங்கள் வயிற்றை நிரப்பி.....,
உங்கள் வயிற்றை வெறுமையாக்கினீர்கள்..
எங்கள் கண்ணீரை துடைப்பதற்காய்....
நீங்கள் கஷ்டப்பட்டீர்கள்.....
நாங்கள் உருவாக வேண்டுமென்பதற்காய்...
நீங்கள் உருக்குலைந்தீர்கள்..
ஆக..,எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீங்கள்தானே....

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை..,
ஒளி விளக்காய்யிருந்த தந்தையே...
வயது போனதாய் நீங்கள் கவலைப்படக்கூடாது..
எங்கள் வீட்டில் நீங்கள்தான் பல்கலைக்கழகம்...
உங்கள் கனவுகளை நிஜமாக்கிப் பயணிப்போம்...
உங்கள் வழியில்...எங்கள் தந்தையே......

Wednesday, June 15, 2011

அடம் பிடித்தல்......

என்னை ஏற்றுக்கொள்ள,
ஏன் அடம் பிடிக்கிறாய்.....
என் உணர்வுகளை புரியாமல்,
ஏன் விலகிப்போகிறாய்.....

நான் உன்னை நினைக்கத் தவறினால்,
நீ என்னை மறக்க நினைக்கிறாய்...
காரணம் கேட்டால்,
தீவிரவாதியைப்போல் முறைத்துப்பார்க்கிறாய்....




நீ கண்ணீரை என் மீது வீசுவாய்..
நான் புன்னகையை உன் மீது தூவுவேன்...
என்னை உதடு கடித்து முறைத்துப்பார்ப்பாய்..
அப்போது அப்பாவியாய் நகர்ந்து செல்வேன்...
என்னை உனக்கு உரத்துச் சொல்லும் போது....
நீ மௌனமாய் பயணிக்கிறாய்..


நான் உனக்கு காதல் மொழிகளால் தேனூற்றும் போது..
நீ என்னை மொழிகளால் காயப்படுத்துகிறாய்....
நான் உன்னை நேசிக்கும் போது...
நீ என்னை வெறுக்கிறாய்...
காலம் கடந்து நான் இன்னுமொருவரால் நேசிக்கப்படுவேன்..
நீ அப்போது என்னால் வெறுக்கப்பட்டிருப்பாய்....

என்னை புரிந்து கொள்ளாமலும்
ஏற்றுக் கொள்ளத் தெரியாமலும்..விலகிப் போகிறாய்..
எனக்கான காலம் வரும்..
அப்போது இன்னு மொருவரால் நேசிக்கப்படுவேன்..
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல்...
நான் தூர நிற்பேன்.....

Monday, June 13, 2011

நமதான காதல்..........

உதடுகளுக்கு தாழ்ப்பாளிட்டு.....
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு.....
விழிகளின் மொழி கொண்டு...
மௌனமாய் நகர்கிறது......
நமதான காதல்.........

 புரிந்து கொள்ள முடியாத......
இதயங்களின் மொழியால்..
இரகசிய தூதுவிடுகிறோம்....நானும்,நீயும்....
அதனால் மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது..
நமதான காதல்.....யாருக்கும் தெரியாமல்....

யார் யாரோ....வருவர்,
ஆனால் நீ வர மாட்டாய்...
காலடிச் சத்தங்களில்..உன்னைத் தேடுவேன்..
அது நீயாக இருக்கமாட்டாய்....அப்போது
மலையளவு பூத்த கனவு....
மேகங்களாய் கலைந்து போகும்........



விரல்கள் தொடாத....புல்லாங்குழலில்......
இராகமாகவே எனக்குள் விழுகிறாய்......
உனக்கான பாடல் என்னிடமிருக்கிறது...
புல்லாங்குழல் உன்னிடமிருக்கிறது.......
ஆனால்,வார்த்தைகளுக்கு தாப்பாளிட்டு....
மௌனமாய்..இரவு நீள்கிறது.....
யாருக்கும் தெரியாமல்....
நமதான காதல்..மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது........

Thursday, June 9, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மின்,நஜ்முல்ஹூசைனுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பாராட்டு...........


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைபாடி,நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,பொத்துவில் யு.எல்.எம்.அஸ்மின்.இந்த இரண்டு கவிஞர்களையும்.அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி,08.06.2011 புதன்கிழமை பாராட்டி கௌரவித்தது.....

விழாவில் பாராட்டப்பட்ட கவிஞர் நண்பர் அஸ்மினின் அழைப்பை ஏற்று மருதானையிலிருந்து நானும் அவரும் அன்று மாலை பஸ்வண்டியில் விழா இடம்பெறவிருக்கும் எல்பிட்டிகலபிளட்ஸை நோக்கி பயணித்தோம்,அங்கு கதிரைகள் வெற்றிடமாகயிருந்தது.குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள்.அப்போது நிகழ்வு ஆரம்பமாகவுமில்லை.அகில் இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் தலமையில் மாலை 07.00 மணியளவில்  கவிஞர்களுக்கான பாராட்டு விழா ஆரம்பமானது.அந்தநேரம் மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.



விழாவின் ஆரம்ப உரையை அதன் முன்னாள் தலைவரும்,முஸ்லீம்மீடியாபோரத்தின் தலைவரும்,நவமணிபத்திரிகையின்பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் நிகழ்த்தினார்.அவரது உரையில்,மலேசிய மாநாட்டில் கவிதைபாடி எங்களுக்கு பெருமை சேர்த்துதந்த இரண்டு கவிஞர்களையும் சிலாகித்துப்பேசியிருந்தார்.அதேநேரம் மாநாட்டில் அறிவிப்புச்செய்து,அரங்கை அதிர வைத்த நமது அறிவிப்பாளர்களான வீ.எச்.அப்துல்ஹமீத்,புர்கான் வீ இப்திகார்.ஆகியோரையும் நினைவுபடுத்தினார்.அதனைத்தொடர்ந்து தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஏ.எம்.நிலாம் உரையாற்றினார்.

நிகழ்வில் வாழ்த்து கவிதைபாட அழைக்கப்பட்ட கவிஞர் நாகூர்கனி கவிதைபாடிக்கொண்டிருக்கும்போதே,கவிமாலை பொழிவதை விட,பூமாலை சூடி அலங்கரிக்கப் போகிறேன் என்று கூறி,தான் கொண்டு வந்த பூ மாலையை நம்ம கவிஞர்கள் இரண்டு பேருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்.அதனைத்தொடர்ந்து மலேசிய மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு தலமை வகித்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் உரை நிகழ்த்தினார்.கவிஞர்களின் அதி திறமைகளை சுட்டிக்காட்டியதோடு,இலங்கைக்குழுவின் மலேசியப்பயணம் என்ற தலைப்பில் தனியாக உரையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதற்காக நாங்களும் காத்திருக்கின்றோம்.இவர் சுகயீனமுற்றிருந்த போதிலும் விழாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனைத் தொடர்ந்து மலேசிய மாநாட்டில் கவிதைபாடி கலக்கிய வயதில் இளைய கவிஞரான பொத்துவில் கவிஞர் யூ.எல்.எம்.அஸ்மின் அங்கு பாடிய கவிதையை பாடி அரங்கு நிறைந் கரகோஷத்தினைகப் பெற்றிருந்தார். அதேபோல் நமது மூத்த கவிஞரான என்.எம்.நஜ்முல்ஹீசைன்  அவரும் அங்கு பாடிய கவிதையைப் பாடி அரங்கு நிறைந்த கரகோஷத்தினைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் தேசம் பத்திரிகையின் பசீர் அலி அந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சிறு பகுதியை வாசித்துக்காட்டினார்.அதில் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என்னை மிகவும் கவர்ந்தது.அதாகப்பட்டது,அங்கு மேடையில் வீற்றிருந்த பெரும் கவிஞர்களை நமது கவிஞர்கள் கிளின்ட் வோல்ட் செய்து அசத்தினார்கள் என்பது........

பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் உரை நிகழ்த்தினார்.அவரது அற்புதமான உரையினை அழகாக நிகழ்த்தினார். அந்த  மாநாட்டில் கவிஞர்களின் கவிதையினை ரசித்த விதத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அங்கு உரை நிகழ்த்துகையில் தான் இலக்கியத்தில் சிறு வயதிலிருந்து ஆர்வம் உள்ளதால்,கவிதையை ஓரளவு மதிப்பிடமுடியும்.ஆக அந்த அரங்கில் கவிதை பாடிக் கொண்டிருக்கும் கவிதைகளை மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  நமது கவிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்  என்று மனதிற்குள் பகை,பகைத்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் நஜ்முல் ஹுசைன்,கவிதை பாட வந்தவர்   அரங்கை கவிதைகளால் கவர்ந்திழுத்தர் எனக் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து கவிதை பாட வந்த நமது இளம் கவிஞர் அஸ்மின் மிகச்சிறந்த மரபுக் கவிதையினை வாசித்து  அரங்கை தன் பக்கம் கவர்ந்திழுத்தர்.இதனால் தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

விழாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அழைக்கப்பட்டும் அமைச்சரவைக் கூட்டம் இருந்தமையால் அவரால் வர முடியவில்லை,அந்நக்கட்சியைச்சேர்ந்த செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன்அலி,பிரதியமைச்சர் பசீர்சேகுதாவுத்,ஆகியோர் வருகை தந்திருந்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,புரவலர் ஹாசீம் உமர்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அங்கத்தவர்கள் என முன்னாள் அமர்ந்திருந்தனர்.விழா அரங்கில் நான்கு பெண்கள் கலந்து கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது......

இறுதியாக மலேசியா மாநாட்டில் கவிதைபாடிய நமது கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,யூ.எல்.எம்.அஸ்மின் ஆகியோருக்கு புரவலர் ஹாசீம்உமரினால்.பொன்னாடை போர்த்தி,பாராட்டுச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்தப்பட்டு,அங்குவந்திருந்த இலக்கியவாதிகள்,ஆர்வலர்கள்,அதிதிகள் எல்லோரும் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லி அங்கிருந்து விடைபெற்றனர்.நானும் சந்தோஷம் தரும் நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு வீடேகினேன்..........