Sunday, August 14, 2011

காத்திருப்பு.........


ஒரு கமராக் காரனைப் போல்
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்
நீதானிருக்கிறாய்........

ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்
ஒற்றைக் கண்ணால்
உன் அழகை ரசிப்பதற்காய்
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன..
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........

என் இதய அறைகளுக்குள்
குடியேறிய உன்னை
தங்கத் தட்டில்  தாலாட்டி மகிழ
ஒரு நகைக் கடையை  தேடித் திரிகிறேன்..
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..
அல்லது என்னை மறந்து
இன்னுமொருவரின் இல்லறத்தை
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?

என் பெட்டிகள் முழுவதும்
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன
பூவாய் இருக்கும் உன்னை
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை
நீ பாலை வனமாய் மாறி
சில நேரம் சுட்டெரிப்பாயோ
என மனம் பதை பதைப்பதுமுண்டு......

உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை
நிரந்தர வாடகை கமராக்காரனாய் 
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?





2 comments:

  1. உங்கள் அவதானத்திற்கு மிகவும் நன்றி

    ReplyDelete