Tuesday, June 5, 2012

என் வசந்தம்...



இளவரசியும்
உன்னிடம் தோற்றுப் போவாள்
என் இதய அரசி நீ என்பதனால்..

என் முற்றதத்து பூக்கள்
மலரும் மகிழ்ச்சியை விட
உன் புன்னகை
என் சந்தோஷ விடியலை எழுதுகிறது..



பகட்டுக்காய்
வேசம் போட்டு பாசம் வைக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
உன் நிஜ அன்பு
நிலவின் ஒளியாய் என்னை நனைக்கிறது..



முகச்சாயங்களில்
அழகு ராணி பட்டம் வாங்கும்
மேக்கப் ராணிகளுக்கிடையில்
நீ இயற்கையாய் வந்து
என் மனதை இழுத்தெடுக்கிறாய்
உன் அழகு....அது கொள்ளை அழகு..



உன் காந்தப் பார்வையால்
ஊசியாய் ஒட்டிக் கொள்கிறேன்
உன் அழகை ரசிக்க முடியாமலும்
என் பார்வையை திருப்ப முடியாமலும்
உன்னிடம் தோற்றுப் போகின்றேன்..



சில நேரம்
மனச் சுமைகளால்
வியர்த்துக் கொட்டும் என் மேனியை
சாமரம் வீசும் உன் வார்த்தைகளால்
குளிர்மைப் படுத்துவாய்
அப்போது..என் வீட்டு மின் விசிரியை வென்று நிற்பாய்..









Thursday, May 3, 2012

உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன்


மனம் வேர்த்துப் புழுங்கிய நேரம்,இளைப்பாற ஏதாவது கிடைக்குமா என்று வானொலியில் தேடினேன்.முள்ளின் நடையில் ஹைதராபாத் இடறியது.உருதுக் கவியரங்கம் “தில் அன்மோல்தா” (இதயம் விலை மதிப்பற்றதாக இருந்தது) என்ற சொற்கள் என்னை பிடித்து நிறுத்தின.வசியம் செய்யப்பட்டவன் போல சொற்களின் பின்னால் நடக்கத் தொடங்கி விட்டேன்.கவிதை தொடர்ந்தது…


  இதயம்
  விலை மதிப்பற்றதாக இருந்தது
  இப்போதோ அதற்கு
  ஒரு விலையும் இல்லை

என்ற கஜலின் முதலடியைப் பாடி விட்டுக் கவிஞர் நிறுத்திக் கொண்டார். ஏன் அப்படி என்று ஆர்வம் குடைந்தது. கஜலின் கவர்ச்சியே இந்த உத்தியில்தான்,கவிஞர் மீண்டும் முதலடியைப் பாடினார்.ஆர்வம் அதிகரித்தது.பிறகு அடுத்த அடியை பாடி முடித்தர்.

  வாங்கிய ஒருத்தி
  திருப்பிக் கொடுத்துவிட்டுப்
  போய்விட்டாள்!

அடடா!என்ன பரிதாபமான வியாபாரம்.திருப்பிக் கொடுத்து விட்டுப் போனவள் மீது கோபம் பொங்குகிறது.ஒன்பதாயிரம் இதயமா இருக்கிறது? ஒன்றில் நஷ்டமானால் மற்றொன்றில் சம்பாதித்து விடலாம் என்று நினைப்பதற்கு?விலை கொடுத்தா வாங்கி இருப்பாள்.இருக்காது அதுதான் விலை மதிப்பற்றதாயிற்றே! இதயப் பண்டமாற்றுச் செய்திருப்பாள்.அல்லது இந்த பைத்தியக்காரர் சும்மாவே தூக்கிக் கொடுத்திருப்பார்.ஒரு வகையில் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.உடைத்து தராமல் முழுமையாகவே கொடுத்திருக்கிறாளே!இன்னொரு வகையில் யோசித்துப் பார்த்தால்,இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.முழமையாக இருந்து மட்டும் என்ன பயன்?மதிப்பே போய் விட்டதே!முன்னாலும் விலை மதிப்பில்லை,இப்போதும் விலை மதிப்பில்லை!ஓ! எத்தனை பேரிடத்தில் இப்படி இதயங்கள் மூலையில் கிடக்கின்றனவோ?

மற்றொரு கவிஞர்..
  நான் ஏழைதான் ஆனால்
  வள்ளலாகவும் இருந்தேன்


என்று ஆரம்பித்தார்,காதலியைப் பார்த்துத்தான்.என்ன அப்படி வழங்கியிருப்பார்?அந்தக் கவிஞராவது விலை மதிப்பற்ற இதயத்தை வைத்திருந்தார்.அவர் தொடர்ந்தார்…

  நீ ஒன்றுமே இல்லை
  உனக்காக நான்
  பிரார்த்தனைகள் தந்தேன்.

ஏழ்மையிலும் கொடுக்க முடிந்ததற்காக நிமிர்ந்து நிற்கும் அவருடைய அழகான கர்வம் எவ்வளவு இனிமையானது!அவருக்கு முன்னால் அவள்தான் எவ்வளவு சிறுத்து போய் நிற்கிறாள்!

  மக்களின் சொத்தை
  அடித்துப் பிடுங்காதீர்கள்


என்று ஆரம்பித்தார்,ஏஜாஸ், அடடா!என்ன நேர்மை என்று வியந்தேன்.ஏதாவது நீதி போதனையே என்று பயமாகவும் இருந்தது.மனிதர் மகா குறும்புக்காரர் அடுத்து என்ன சொன்னார் தெரியும்h?

  பேசாமல்
  மருமகனாகி விடுங்கள்
  எல்லாச் சொத்தும்
  உங்களிடம் வந்து விடும்


வெறும் நகைச்சுவையா இது?நாட்டில் இன்று பகிரங்கமாக நடக்கும் கொள்ளைதானே இது?அதுவும் மாப்பிள்ளை என்ற முகமூடியில்!

பழைய தமிழில் காதலைத்தான் ‘களவு’என்பார்கள்.இப்போது கல்யாணத்தைதான் ‘களவு’ என்று சொல்ல வேண்டும்.பாவிகள் தமிழையே மாற்றி விட்டார்களே!அதுவும் எப்படிப்பட்ட களவு?பெண்ணின் கன்னத்தில்‘கன்னம்’ வைத்து அப்பன் சொத்தைக் களவாடுவது.

நூர் என்ற கவிஞர் வாழ்க்கையிடம் பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தர்.

  வாழ்க்கையே!
  உன் முகவரி  தேவை
எதற்காக?

  உன்னைப் பிரிந்தால்
  மறுபடியும்
  எப்படிச் சந்திப்பேன்?


என்று தம் ஆற்றாமையைப் புலம்பிக் கொண்டிருந்தர்

  வாழ்க்கையே
  உன் முகவரி தேவை

எத்தனை ஆழமான வரிகள்!வாழ்க்கையின் முகவரி கிடைப்பது எத்தனை கடினமான காரியம்?யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முகவரி என்று தருகிறார்கள்,தேடிப் போய் பார்த்தால்தான் தெரிகிறது,அங்கே வாழ்க்கை இல்லையென்று.நம்முடைய எத்தனை கடிதங்கள் திரும்பி வந்திருக்கின்றன முகரியாளர் இல்லை என்று! எத்தனை பேர் வாழ்க்கையைத் தேடுவதிலேயே ஆயளைச் செலவழித்து விடுகிறார்கள்!

கவிஞர் அதிர்ஷ்டசாலி,என்றைக்கோ வாழ்க்கையை எதிர்ப்பட்டிருக்கிறார்.பிரிந்துவிடுவோம் என்ற பயம் உடனே வந்திருக்கிறது.புத்திசாலி வாழ்க்கையிடமே அதன் முகவரியைக் கேட்கிறார்.இதிலிருந்தே தெரிகிறது அவர் வாழ்க்கையை எங்கோ வழியில் சந்தித்திருக்கிறார் என்பது,இந்த வாய்ப்புக் கூட நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

அதே கவிஞரின் சிந்தனையிலிருந்து மற்றொரு கிரணம் பாய்ந்தது.

  என் வீடு இடிந்தாலென்ன
  உன் வீடு இடிந்தாலென்ன


என்று தொடங்கினார்.இதயம் படபடத்தது அடுத்துச் சொன்னார்
  
புயலுக்கோ பாதை தேவை

ஈவிரக்கமற்ற இயற்கையின் விதி;யை எவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட்டார்.புயல் மட்டும்தானா இப்படி?நம்முடைய சமூகத்தில்தான் எத்தனை வகைப் புயல்கள் இவற்றின் பாதைக்காக எத்தனை பேருடைய வாழ்க்கைகள் இடிக்கப்பட்டு விடுகின்றன?

நூர் என்றால் ஒளி என்று பொருள்.கவிஞரின் புனைப் பெயர் நூர் அதை வைத்தே அவர் விளையாடினார்.

  ஒவ்வொரு விளக்கிற்கும்
  ஒளி தேவை
  இப்போதோ “ஒளி”க்கும்
  ஒரு விளக்கு
  தேவைப்படுகிறது!


விளையாட்டா இது?வினையாட்டு! எவ்வளவு பெரிய சக்திக்கும் ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறதே!கவிஞர் நம்முடைய நிலையையும் அல்லவா இதில் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் ‘ஒள’தான் இருந்தாலும் அவரையும் தாங்கிக் கொண்டு நிற்க வாய்ப்பு,வசதி வேண்டியிருக்கிறதே.இவை இல்லாமல் எத்தனை ‘ஒளி’கள் ஏற்றப்படாமலே போயிருக்கின்றன!

‘இனாயதீ’என்ற கவிஞர்

  நானோ அவளுக்கு
  தினந் தோறும் கடிதம் எழுதுகிறேன்


என்று தொடங்கினார்.

  பேனா இல்லை
  காகிதம் இல்லை
  மை இல்லை


எவ்வளவு அழகான கடிதம்,எழுதப்பட்ட காதல் கடிதத்தை விட எழுதப்படாத கடிதம்தான் அழகானது.அப்படியே எழுத நினைத்தாலும் எழுதி விட முடியுமா? வலைக்குள் மீன் சிக்கும்,தண்ணீர் சிக்குமா?

‘இனாயதீ’ மீண்டும் தொடர்ந்தார்.

  உன் கண்கள்
  என் கண்கள் இல்லையா


என்று காதலியைப் பார்த்து கேட்டார்.எதற்காக இவ்வளவு அழகாக கேட்கிறார் என்று துடித்தேன்.

உன் கண்ணால்
கொஞ்சம்
தூங்கிக் கொள்கிறேன்


என்று அவர் முடித்த போது என்னால் தாள முடியவில்லை.வானொலியை நிறுத்தினேன்.தூங்குவதற்காகக் கண்களைத் தேடினேன்.

(..கவிக்கோ அப்துல் ரகுமானின் “அவளுக்கு நிலா என்று பெயர்”; நூலில் நான் லயித்துப் போய் காதலாய் மேய்ந்ததை என் வலைப் பூவில் பகிர்ந்து கொள்கிறேன்..)

Saturday, March 17, 2012

மொழியின் மௌனம்...



உன்னால் மட்டும்தான் முடியும்
என் வார்த்தைகளை ஊமையாக்க
மொழிகளை வர்ணம் தீட்டி
ஊரறிய பேசும் நான்
நீ வந்ததும் மௌனமாகிறேன்...

உணர்வுகளை மொழி பெயர்த்து
அர்த்தங்களை வகுக்கும் உன்னால்
என் மௌனங்களை
ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனாய்...

காதல் கதைகளை
காது நிறைய கேட்கும் என்னால்
என் காதலைத்தானே
 சொல்ல முடியாமல் போகிறது
எத்தனைதான் வீராப்பு காட்டினாலும்
உன்னிடம் நான் வெறும் காகிதம்தான்...

நகைச்சுவை நடிகனைப் போல்
குறும்புத்தனமாய் பேசித்திரியும்
என் வார்த்தைகள்
உன்னிடம் மௌனமாகவே அமர்கிறது
நீயோ கல்யாண வீட்டைப் போல்
கலகலப்பாய்த்தான் இருக்கிறாய்
என்ன செய்ய..
ஓர் அழையா விருந்தாளியைப் போல்
உன் அழகை ரசிப்பதுதான்
இப்போதுகளில் என் தலைவிதியாச்சு...





Wednesday, February 29, 2012

நீ வந்துதான் போனாய்...


ஆர்ப்பாட்டமில்லாமல்
நீ வந்து போனாய்
உன் நினைவுகள்
கடல் அலையாய்
எனக்குள் அடித்துக் கொண்டிருப்பதை
உன் மனமறியுமா..?


இரவு
பொழுதை கவ்விக் கொண்ட நேரத்தில்
உனதான வருகை
என்னை முழுவதுமாய் ரசிக்க வைத்தது..


உடல் களைப்புற்ற தருணத்திலும்
உன் அழகு மங்கவில்லை
நீ புன்னகையை விரித்த போது
நான் விரல் கடித்து
 விரல் புன்னாய்ப் போனதை
உனக்கு எப்படிச் சொல்வேன்..


இரவுகளில்
நிலாவையும்,நட்சத்திரங்களையும்
ரசிகக்கத் தெரிந்த எனக்கு
இப்போதுகளில்
உன்னை மட்டும்தான் ரசிக்க முடிகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்..


நீ தொலை தூரமாகியும்
தூர்ந்து போகாத உன் வார்த்தைகளும்
வந்து போன கால் தடங்களும்
உன் புன்னகையும்
நினைவுகளால் என்னை ஆசுவாசப்படுத்துகிறது..




Tuesday, January 31, 2012

வானொலியில் செய்தி வாசிப்பது எப்படி


வானொலியே செய்திகளை விரைவில் கொண்டு செல்லும் ஒர் சாதனமாகும்.இதனால் வானொலிச்செய்தியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது,குக்கிராமத்தில்,அடர்ந்த காட்டில்,கடல்களில்,வேலைகள் செய்து கொண்டும்,வாகானத்தில் பிரயாணம் செய்து கொண்டும்,நாட்டு நடப்புக்களையும்,உலக நடப்புக்களையும், வானொலிச் செய்தியறிக்கை மூலமாக மாத்திரமே இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.

சகல செய்திகளும் முக்கியமானது ஆனால் எமது உள்ளுர் செய்திகள் எமக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தம்மை நேரடியாகத் தாக்கும் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து கேட்பார்கள்.எனவே வானொலியில் 10 நிமிடங்கள் வாசிக்கும் செய்தியறிக்கையானது அந்த 10 நிமிடங்களும் மக்களின் வாழ்க்கையில் 60 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்பதால்,எந்தக்காட்சிகளுமின்றி குரல் வழிமூலமாக வரும் வானொலி செய்தியறிக்கையை  வாசிப்பவர்கள் மிக கவனமாக வாசிக் வேண்டும்.

வாங்க செய்தி வாசிக்க...

*.செய்தி வாசிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக சமூகமளியுங்கள்

*முழுச் செய்தியறிக்கையும் உங்கள் கையில் கிடைக்கும் போது இரண்டு நிமிடங்களே வாசிப்பு நேரத்திற்கு இருக்கக் கூடும்.இதற்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அந்த வேளைகளில் பரபரப்பு அடையாதீர்கள்.

*.பல அம்சங்கள் முன்கூட்டியே கிடைத்துவிடும் கவனமாகவும்,உரத்தும்,வாசித்துப் பாருங்கள்,ஏனென்றால் எழுத்துப்பிழை, வசன அமைப்புச் சிக்கல்,மொழிபெயர்ப்பில் பிழை இப்படி பல இருக்கலாம்.நீங்கள் அதனை உரத்து வாசிக்கும் போதுதான் மூளைக்கு தவறுகள் நன்கு புலப்படும்..

*.நீங்கள் சரிவர செய்தி வாசிப்பதானால் அறிக்கையில் தரப்பட்டுள்ளவற்றை சரிவர புரிந்து கொள்வது அவசியம்.எனவே செய்தி ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள்..

*.உச்சரிப்பை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் செய்தி ஆசிரியர் வேலையில் மும்முரமாகயிருந்தால் தெரிந்த வேறொருவரிடம் கேளுங்கள்..

*.வசனங்களை முற்றுமுழுதாக மாற்றும் பொழுது அர்த்தம் பிசகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

*.சிலர் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியில் கவனம் செல்லாது,அவரது வாசிப்பில்தான் நேயர்களின் கவனம் செல்லும் காரணம் அவர் மோசமாக செய்தி வாசிப்பதுதான்.நல்ல செய்தி வாசிப்பாளர்  வாசிக்கும் பொழுது செய்தியில்தான் நமது கவனம் செல்லும் அவர் செய்தி வாசித்து முடித்த பின்னர்தான் அவரைப்பற்றிப் பாராட்ட தோன்றும்..

*.கவனமாகவும் சற்று உரத்தும் வாசிப்பது நல்லது ஆனால் அதற்கான விசேட குரல் தேவையில்லை வழமையை விட சற்று குரலை உயர்த்தினால் போதுமானது..

*.பல ரகப்பட்ட செய்திகள் இருக்கும்.அப்போது சிறு மாறுதல் வேண்டும் குரலில், ஆனால் நடிப்புத் தொனி வருதல் கூடாது..

*.முக்கியமான விடயங்களில் சிறிது அழுத்தம் கொடுத்தும்,குரலை சிறிது தாழ்த்தியும் வாசிக்கலாம்..

*.கண்கள் முன்னே செல்ல குரல் பின்னால் தொடர வேண்டும்..

*.நம்பிக்கையில்லாவிட்டால் உங்கள் குரலில் தடுமாற்றம் தெரியும்..

*.சிறிதாக தடங்கினால் அது பாதகமில்லை மன்னிப்புக் கோரவேண்டியதில்லை ஆனால் பாரதூரமான மாற்றம் என்றால் நிச்சயம் மன்னிப்புக் கோர வேண்டும்..


*.நீங்கள் பதட்டம் இல்லாமலிருப்பின் உங்கள் சுவாசமும் வழமைபோல் இருக்கும்.வசனத்துக்கு வசனம் வாசித்தல் கூடாது,வாசகத்திற்கு வாசகம் வாசித்து நிறுத்த வேண்டும்..

*.பெரிய சொற்கள் வரும்பொழுது ஒரே மூச்சில் வாசித்து முடிக்காமல் சிறிது நிறுத்தி வாசிக்கலாம்..

*.உங்கள் முகத்தை ஒலிவாங்கியிலிருந்து அங்குமிங்குமாக திருப்பாதீர்கள்..

*.இரு அம்சங்களுக்கு இடையில் சிறிது மௌனம் அவசியம்..

*.உங்கள் அபிப்பிராயம் தொனிக்க வாசித்தல் கூடாது..

*.அதிகாரபூர்வமாக ஆனால் அகங்கார தொனியில் வாசித்தல் கூடாது..

*.உரக்கச் சப்தமிட்டு வாசித்தலும் கூடாது..

*.உங்கள் குரலை நீங்களே ரசிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.அனுபவம் உள்ளவர்கள் கெட்போன் போடுவார்கள் ஏனெனில் அவர்கள் தமது குரலை கவனிக்காமல், பிழைகளைக் கவனிக்கும் அனுபவத்தை பெற்றிருப்பதால்..


*.ஒரு அம்சம் முடிந்ததும் அது பற்றி மறந்து அடுத்து வரும் அம்சத்தில் கவனம் செலுத்தி வாசிக்கவும்..

*.இயற்கையான சரளமான போக்கு விரும்பத்தக்கது..

*.சரியான உச்சரிப்பு சரியான மாத்திரையளவில் இருப்பது அவசியம்..

*.எந்த ஒரு செய்தி வாசிப்பாளரையும் நீங்கள் பாவனை செய்யாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு,நல்லதென்று நாலு பேர் சொன்னால் தொடர்ந்து உங்கள் பாணியைக் கடைப்பிடியுங்கள்,சரியாக இல்லையென்றால் சிறிது கவனித்து மாற்றம் செய்யுங்கள்..

*.வேறு செய்தி வாசிப்பாளர்களின் வாசிப்பை விமர்சன ரீதியாகக் கவனித்து நல்ல அம்சங்களைத் தெரிந்து பின்பற்றுங்கள்..

என்னால் முடிந்தளவு ஓர் சிறந்த செய்தி வாசிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.இவ்வாறான அம்சங்களை கடைப்பிடிக்கின்ற போதுதான் ஓர் செய்தி வாசிப்பாளரினால் சிறந்த முறையில் செய்தி வாசிக்கவும் முடியும்,அதேவேளை நல்ல செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தவும் முடியும் எனவே வானொலி செய்தி வாசிப்பாளர்கள் தங்களது அளப்பரிய பொறுப்புணர்ந்து இவற்றை மறந்து விடாது செயற்படுங்கள்...


Wednesday, January 11, 2012

விழியின் வலி...



என் இளமையை தின்று
அவள் வீசிய பார்வையால்
மயங்கி நின்ற அவளின் விழியோரம்
காதலாய் கவ்விக்கொண்டேன்...


உன் கூட்டுக்குள்
என்னை முடக்கியது போல்
உன் விழிகளுக்குள்
யார் யாரையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்...


புனிதம் போர்த்திய உன் பார்வை
எனக்கு சொந்தமென்று நம்பியிருந்தேன்
இன்னுமொருவனுக்கு
உன் பார்வையை வாடகைக்காய் அனுப்பிய போது
அது காமமாய் அலைந்தது...


இப்போது
பல தெருக்கள் கடந்து
நீ மணம் வீசுகிறாய் கண் கவர் காதலியென்று
உன் விழியோரம் மேய்ந்த என் காதல்
ஊர் தாண்டி அழுகிறது
இவன் காதல் பாவமென்று...


உந்தன் இனிப்புக்காய்
கரையானாய் அலைந்தேன்
உன் உணர்வுகளில் வெட்கமானேன்
ஆனால்,இப்பொழுதுகளில்
எந்தன் விழிகள் உன்னுடன் முரண்படுகிறது
அவ்வேளைகளில் என் கண்கள் சிவக்கிறது...




Thursday, January 5, 2012

அடுக்கு மாடியில் ஓர் சக்கரை...



உன் உடம்பின் இயலாமையை
உனக்குள் மறைத்துக் கொண்டு
என்னை திருப்திப் படுத்த
உள்ளூர உன்னை மீறிய
வலிகளை தாங்கிக் கொண்டாய்...


தலையணையை
அணைத்துக் கொண்டு
கட்டிலில் சுதந்திரமாய்
ஓய்வெடுக்க வேண்டிய நீ
உன் தலை வலியை
எங்கோ காற்றில் மேய விட்டு
புதுப் பெண்ணாய்
என்னை ஆசுவாசப்படுத்தினாய்...


பல நேரமாய்
ஒட்டியிருந்த என்னை
குத்திக் குதற
சில நேரம் நீ நினைத்திருக்கலாம்
அதையும் அடக்கி
உன்  மென்மையான
புன்னகையை மலர்ந்தாய்
அது ஆயிரம் இதயங்களையும் தாண்டி
காதல் தரும் புன்னகை...


வெறுங் கையுடன்
உன் அரண்மனைக்குள் வந்த போது
விருந்தாளியாய் கவனித்தாய்
உன் பெரு மனதால்
நான் வெட்கித்துப் போனேன்...


அங்கு வந்திருக்கக் கூடாது
உனக்கு தொந்தரவு தந்திருக்கக் கூடாது
உன் சக்தியை மீறிய இயலாமையால்
வாடி நின்ற உன் முகம் பார்த்து
என் மனம் அழுதது
உனக்கு உரிமையில்லாத நான்
உன் தலை முடியை கோதி
எப்படி ஆறுதல் படுத்துவேன்

இருந்தாலும்
உன் நலவுக்காய்
என் எல்லாப் பிரார்த்தனைகளுடனும்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்...





Tuesday, December 20, 2011

தோழா...


எனக்குள்
சங்கமித்துக் கொண்ட
உன் நட்புக்காய்
என் உள்ளம் படும்பாட்டை
எப்படித்தான் உனக்கு சொல்வேனோ...

பழகிய பொழுதுகள்
பழசு படாமலிருக்கையில்
நாம் பேசிய வார்த்தைகள்
கெட்டுப் போகாமலிருக்கையில்
கண்ட கனாக்களெல்லாம்
பொய்யாக கரைந்தது எப்படி....

நாம் பழகிய நாட்கள்
உனக்கு ஞாபகமிருந்தால்
எல்லையில்லா நேசம் வைத்து
பழகிய என்னை
எப்படி மறப்பாய்...

Thursday, December 8, 2011

பேசாத வார்த்தைகள்...


குழந்தையின் உச்சரிக்கப்படாத வார்த்தைகளாய்
காதலின் மொழியின்றிய உணர்வுகளாய்
வாழ்க்கையின் தூரத்தில் நின்றழும்
குமரியின் பெருமூச்சாய்
குடிசைக்குள் கரைந்து போகும்
கனவுகளின் தொட்டிலாய்
ஆயிரம் ஆயிரம் உணர்வுகள்
பேசப்படாத வார்த்தைகளாய்
எனக்குள்ளேயே உருகிக் கரைகிறது...

Monday, December 5, 2011

ஏனோ புரியவில்லை...


பல கதைகள்
என் மனதில் குவிந்து கிடக்கிறது
உன்னிடம் சொல்வதற்கு
சொல்வதற்காய் உன் அருகில் வரும் போது
வார்த்தைகள் மறுத்தோடுகிறது
ஏனோ தெரியவில்லை...

சந்திக்கும் சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே சொல்லாமல்
மௌனமாய் பிரிந்து போகிறோம்
பல கதைகள் கேட்கத் தெரிந்த நமக்கு
நமது கதையைத்தான் சொல்ல முடியவில்லையே...

எப்படியாவது
உன்னிடம் ஏதாவது சொல்ல எத்தனிக்கும் போது
நான் உன்னிடம் செல்லாக்காசாகிப் போகிறேன்
எப்போதுதான் உன் மடியில் செல்லமாய் அரவணைப்பாயோ...

நீ என்னை கழித்து பார்த்தாலும்
நான் உன்னை சேர்த்துத்தான் பார்க்கிறேன்
நீ எப்படியானாலும்
உன்னை நான் நினைப்பதிலும்
கவிபாடுவதிலும் காலம் கழிகிறது...

Monday, November 28, 2011

கவனிப்பாரற்று...


பூக்களைப் போல்
மென்மையாய் வருடிய காதல்
பாலைவனமொன்றில்
கருகிக் கொண்டிருக்கிறது...

இன்பம் தரும் என்று
காதல் படகில் பயணித்த போது
துடுப்பிழந்து
மெல்ல,மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்க்கையின் கனவுகள்
நிறைவேறாமல் நீண்டு கொண்டே போகிறது
வயது போக ஞாபக மறதி குடி கொள்கிறது
ஆனால்,அவளது நினைவுகள் மட்டும்
குறையவில்லை
அவள் பல கோணங்களில்
என்னை கிளறிக் கொண்டிருக்கிறாள்...

இதயம் தன்னில்
தேக்கி வைத்த காதல்
கவனிப்பாரற்று
உடல் முழுவதும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது...

 நான் எழுதிய
காதல் வரிகள்
வாசிக்கப் படாத
வரலாற்றுப் புத்தகமாய்
மேசையில் கிடக்கிறது....

Tuesday, November 15, 2011

திரும்பிப் பார்...


உன் குரலை கேட்பதற்காய்
நான் தவமிருக்கையில்
நீ பேசாமல் இருப்பது
என்னை வருத்தப்படுத்துகிறது
இந்த குயிலின்  ஓசையின்றி
நாட்கள் கவலையோடு நகர்கிறது...

முகவரி தவறிய
கடிதங்களைப் போல்
உன் கைத் தொலை பேசியும்
என்னிடமே திரும்பி வருகின்றன
விலாசம் தேடி அலுத்துப் போன
தபாற் காரனைப்போல்
உன் இலக்கத்தை பல முறை அழுத்தி
பயனற்றுப் போகையில்
என் விரல்கள் தெலைபேசியிடம் சண்டை பிடிக்கின்றன...

குழந்தையைப் போல்
அடம்பிடிப்பது உன்னிடம்தான்
சில வேளை குழந்தைத் தனமாய்
பேசும் போது தவறிழைத்தால்
உன் மனச்சிறைக்குள் வைத்து
தண்டனை தா
உன்னை விட்டு பிரியும்
சக்தி எனக்கில்லை...

உன் மனசு
என் வார்த்தைகளால்
காயப்பட்டால் மன்னித்துக்கொள்
நீயின்றி வெறிச்சோடிப் போகும்
என் வாழ்க்கைக்கு வசந்தம் தர நீதான் வேண்டும்...

என் கலையாத காதல்
கனவாகிப் போன கதையை
உன்னிடம் இறக்கி வைத்த பிறகும்
ஏன் கோபித்துக் கொள்கிறாய்
கலைகளை நன்கு கற்ற நீ
என் மனக் கவலைகளை
ஏன் புரியாமல் போகிறாய்...

Thursday, November 10, 2011

நீரை எப்படி அருந்துவது...



71 வீதம் நீரால் நிரம்பிய பூமிப் பந்தில் வாழும் நாம்  நீரோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.நீரானது எம் உயிர் வாழ்வுக்கும் ஏனைய தேவைகளுக்கும் மிகவும் அத்தியவசியமானது.அதேபோல் இந்த உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளுக்கும்,மரம்,செடி,கொடி,இன்னோரன்னவற்றுக்கும் நீர் உயிர் நாடி,இறைவனால் இந்த உலக வாழ் உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட உன்னதமான கொடைதான் நீர்,நமக்கு மிக இலவசமாக கிடைக்கின்ற பக்கவிளைவற்ற மருத்துவ  குணம்  கொண்ட இந்த நீர் அதன் இயற்கைத் தன்மையிலிருந்து மாறுகின்றஅல்லது மாற்றப்படுகின்ற போது சில வேளை நமது உயிரையும் குடிக்கிறது.இலங்கையைப் பொறுத்தளவில் தங்கள் வளவுகளில் அல்லது பொதுவாக தோண்டப்பட்ட கிணுறுகளிலிருந்து குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் நீரைப் பெறுவர்.ஆனால் காலம் செல்ல  குடி மக்கள் பெருத்த போது நீர் அசுத்தமடைவதனையும் தவிர்க்க முடியாமல் போனது.இதனால் நமது மூலை முடுக்கெல்லாம் வோற்றர் சப்ளை மூலமாகவே நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த நீரைத்தான் நம்மில் பாவிப்போர் அதிகம்.....

கவிதையில் காதலை பாடிக்கொண்டிருக்கும் நான் ஏன் இப்படியான பதிவை போடுகிறேன் என்று நீங்கள் உங்கள் தலைமயிரை கிள்ளியெடுப்பது எனக்கு புரிகிறது.நான் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்த போது என் கையில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தது.அது மிகப் பெறுமதியான துண்டுப் பிரசுரம் நமதூர்களில் அரசியலுக்கும்.ஒருவனை வம்புக்குயிழுப்பதற்கும்,அடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டு நல்ல சிந்தனையாளர்கள் எழுதிய துண்டுப்பிரசுரம்.நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது பதிவில் பதிவு செய்கிறேன் வாசித்துப் பாருங்கள்...
அந்தப் பிரசுரம் இப்படித்தான் அமைந்திருந்தது
எல்லோருக்கும் இனிய
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

அதிக நீர் அருந்துவோம் ஆரோக்கியம் பெறுவோம்

ஃசாதாரணமான ஒருவர் ஒரு நாளைக்கு 3 லீற்றர் தொடக்கம் 6 லீற்றர் வரை நீர் அருந்த வேண்டும்

ஃ நாளாந்தம் ஒருவர் 6 லீற்றர் அதற்கு அதிகமாக நீர் அருந்துவது    ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

ஃ அதிக நீர் பருகுபவர்களுக்கு பல வியாதிகள் கிட்டவும் நெருங்காது.அத்துடன்  அதிகம் நீர் பருகுவது உற்சாகத்தையும்,மகிழ்ச்சியையும்,முகப் பொலிவையும் தரும்

ஃ குளிர்ந்த நீரைப் பருகுவதைத் தவிருங்கள்.இளம் சூடான நீரை அல்லது சாதாரண நீரையே பருகுங்கள்...


வோற்றர் சப்ளை நீரை அப்படியே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது
வோற்றர் சப்ளை நீரை பருகுமுன் செய்ய வேண்டியவை


01.சிறிது நேரம் கொதிக்க வைத்திருந்து ஆறிய பின் பருகவும்

02உருளையான போத்தலில் அடைத்து 8 முதல் 12 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு செய்து பருகவும்

03.வடிகட்டப்பட்டு குறைந்தது 1|2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து  பருகவும்

04.குறைந்தது 2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து மேலாக எடுத்து பருகவும்

வோற்றர் சப்ளை நீரை பாவிப்பவரா நீங்கள் இதனை கடைப்பிடித்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது


Monday, November 7, 2011

எனக்குள் நீ...


 எனதான எல்லா அசைவுகளிலும் 
உனதான நினைவுகள்தான்
பூக்களாய் மலர்கின்றது...

என் வேலைத்தளத்திலும்
என் தனிமையிலும்
என் மனசுக்குள் பம்பரமாய்
நீ சுழன்று கொண்டிருக்கிறாய் 
ஒரு நிழற் படமாய் 
நீ அடிக்கடி என்னை சந்தித்து போகிறாய்...


ஆறாமல் வேதனை தரும்
சில காயங்களை  
கவிதையில் இறக்கி வைக்க 
பேனாவையெடுத்தால்
உன்னைப் பற்றியதான 
வார்த்தைகள்தான் வருகின்றது
ஆக,உன்னைத் தவிர 
வேறொன்றையும் என்னால்
எழுத முடியவில்லை.


என் பாதையில் 
பாவையொன்று நடந்து போகும் சத்தம் 
நீ நடந்து செல்லும் சத்தமாய்  
என் காதுகளுக்கு கேட்கிறது 
வந்து பார்த்தால் 
எவர் எவரெல்லாம் போகின்றனர் 
ஆனால்,நீ மட்டும் வருவதாயில்லை 
எதிர்பார்ப்புக்களுடன் ஓடி வந்த நான் ஏமாந்து போவேன்
இப்போதுகளில்
என் அக,புற தோற்றங்களில்
உன் விம்பங்கள்தான் காட்சியாய் விழுகிறது...

இத்தனைக்கும் காரணம்
நீ நிலவைப் போல்
தூரமாய் இருந்த போதும் 
நினைவுகளால் தினம் தினம்
என்னை தழுவுகிறாய்...


Wednesday, November 2, 2011

உனக்குத் தெரியுமா..?



ஒரு இரவு
தூக்கம் என் கண்களை
அதிகம் தழுவிய போதும்
உன் வார்த்தையால்
என் விழியோரம்
எண்ணெய் ஊற்றினாய்
அந்த இரவு தூக்கமின்றி
உன் வார்த்தையோடு
கடினப்பட்டுக் கொண்டது...


தமிழை அமுதமாய்
உறிஞ்சிக் குடிக்கும் நீ
அந்த மொழியால்
என் மனதை பலவீனப்படுத்துகிறாய்
வார்த்தைகளால் வெறுக்கும் நீ
வானமளவு பொழியும் அன்பை
உன் மனதுக்குள்
குடை கொண்டு மறைத்து வைத்திருக்கிறாய்...


புறாவைப் போல்
பறந்து திரியும் நீ
உன் நினைவுகளுடன் போராடும்
என்னுடன் சன்டை பிடிக்கிறாய்
உன் ராச்சியத்தில்
சிட்டுக் குருவி போல் அமர வரும் போதெல்லாம்
உன்  விழியின் கற்கள் கொண்டு
என்னை விரட்டுகிறாய்
அப்போதெல்லாம் கண்ணாடியாய்
நொறுங்கிப் போகின்றேன்...


கண்கள் கண்டதெல்லாம்
படம் பிடித்துக் கொள்ள
நான் ஒரு சினிமாக்காரனல்ல
இதயம் தொட்ட உன்னை
கண் கலங்காமல் காக்கும்
உந்தன் காவலன்...


எப்போதும்
பிரிவை வேண்டி நிற்கும் உன்னிடம்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
உன் அன்புக்காய்
தவமிருக்கிறேன்...




Monday, October 31, 2011

வடக்கு முஸ்லிம்


தாய் பிறந்த மண்ணை
முத்தமிட காத்திருக்கையில்
மகனின் சுவாசம்
அடங்கிப் போனது அகதி முகாமில்
தன் சேய்யின் நிறைவேறா  ஆசையுடன்
அவளது கால்கள் சக்தியின்றி
எட்டு மேல் எட்டு வைத்து நகர்கின்றன
சொந்த நிலத்தை தரிசிப்பதற்கு...

வீசப்பட்ட கற்களாய்
ஆங்காங்கே அலைக்கழிகிறது
துப்பாக்கி முனையில்
வெளியேற்றப்பட்ட என் உறவுகள்
தன் வீட்டில்  விளக்கேற்றி வாழ
எத்தனை பிரார்த்னைகளும்,வேண்டுதல்களும்
இந்த பாவப்பட்ட அதிகாரிகளிடம்
எங்கள் வாழ்க்கையைப் போல்தான்
இந்த மீள் குடியேற்றமும்
அரையும் குறையுமாக...

களி மண்ணில் புதைந்த பாதங்களும்
வேளாண்மையில் சிந்திய வியர்வைத் துளிகளும்
பன்னங் கீற்றுக்களில் தவழ்ந்த கதைகளும்
எங்களை சுமந்து நின்ற பள்ளிக்கூடங்களும்
புழுதி கிளப்பி நடந்து திரிந்த தெருக்களும்
பலகாரம் பரிமாறிய உறவுகளும்
காலையும்,மாலையும் காலம் கடத்திய கடற்கரையும்
எங்கள் ஞாபகங்களை சுமந்து நிற்க
கண்ணீருடன் விடை பெற்றோம்
மீண்டும் அவைகளை
ஆறத் தழுவும் கனவுகள்
எப்போது நனவாகும்

 தசாப்தங்கள் தாண்டியும்
முந்தானையை வேலியாக்கி
தெருவோரங்களில் மானங்காத்து வாழ்கிறோம்
தொலைதூரமில்லா
எங்கள் ஊர்கள்
சிலரால் இன்னும் தொலைக்கப்படுகிறது
"தயவு செய்து" என்று விண்ணப்பித்து
அலுத்துப் போய்விட்டது
அப்பாவி முகத்துடன்
எத்தனை முறை அதிகாரிகளிடம் கெஞ்சுவது
எங்கள் நிலத்தை
எங்களுக்கு தருவதற்கே
இட வெளிகள் நீண்டு போகின்றது...

ஆயிரம்தான் தந்தாலும்
மழையில் கரையும் குடிசையாய்
காற்றில் பறக்கும் கூடாரமாய்
வாழ்க்கை கழிகிறது
உங்கள் ஆயிரங்கள் வேண்டாம்
எங்கள் ஆதனப் பூமியில் வாழ வைத்தால் போதும்
எப்போது நாங்கள் போவோம்...
புன்னகைத்த முகங்கள்
நெருப்பாய் வார்த்தைகளை கொப்பளித்தது
எங்களை வெளியேறச்சொல்லி
அன்று அழுதவர்கள்
இன்று முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்
எங்கள் மீள் குடியேற்றத்தில்...
வேரூண்டிய நிலத்தில்
பிடுங்கப் பட்ட
எங்கள் மரங்களையும், விதைகளையும்
எப்போது நடுவீர்கள்...?

Saturday, October 29, 2011

உன்னை பாடும் என் வரிகள்...



எனக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பி
கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருப்பது போல்
என்னை பிடிக்காத அவளின்
கவிதைகளை தினமும் வாசிக்கிறேன்
ஏனெனில் கவிதையில்
நானும் அவளும் ஒரே பல்லவி...

பாடல்களுக்கிடையில்
நான் வாசிக்கும் கவிதையில்
நீ அதிகம் வசிக்கிறாய்
அந்த கவிதையை காதலிப்போர் அதிகம்
ஆனால் நீ காதலிக்கவில்லை
காரணம் கேட்டால்
ஒரு வக்கீலைப் போல்
வாதிடுகிறாய்...

பிடித்த நிகழ்ச்சியில்
பேச வாய்ப்புக் கிடைக்காது
கவலைப் படும் ஒரு தீவிர ரசிகனைப் போல்
உன் அருகிலிருந்து பேச
வாய்ப்பின்றி ஏமாந்து போகிறேன்...

நேயர் விருப்பத்தில்
பிடித்த பாடலை கேட்க
அழைத்து,அழைத்து 
தொடர்பு கிடைக்காமல் 
நொந்துபோகும் நேயரைப் போல்
உன் தொலை பேசி
இயங்காத நாட்களில்
நான் இயங்க மறுத்த பொழுதுகள்
உனக்குத் தெரியுமா..?

கலையகத்தில் 
முணு முணுக்கும் பாடலைப் போல்
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறேன்
உன் அழகான பெயரை உச்சரிப்பதால்
என் குரலும் அழகாகிறது...

என்னை 
பலர் சிலாகித்து பேசும் போது
உன்னை நினைத்து கொள்வேன்
நீதான் சிட்டுக் குருவி போல்
எனக்குள் இருந்து கொண்டு
பலரின் கண்களிலும்,காதுகளிலும்
கொண்டு சேர்க்கிறாய்...

எப்போது
நிகழ்ச்சி கிடைக்கும் என்று
ஆவலுடன் இருக்கும் அறிவிப்பாளரைப் போல்
உன் பதிலுக்காய் காத்திருந்து
நான் ஏங்குவதுண்டு...

கனவுகளுடன்
ஒலி வாங்கியை உயிர்ப்பிக்கும்
புதுமுக அறிவிப்பாளரைப் போல்
ஆயிரம் கனவுகள் எனக்குள்
உயிர்த்தெழுகிறது 
அத்தனை கனவுகளும்
எனக்குள்ளேயே கரைந்து போகிறது...

நான் வரிகளை எழுதுகிறேன்
நீ பாடுகிறாய்
நான் நினைப்பதை நீ சொல்லுகிறாய்
நீ நினைப்பதை நான் எழுதுகிறேன்
நீ பாடல் நான் வரி
நீ பாட மறுத்தால்
என் வரிகளை நான் யாரிடம் கொடுப்பேன்...

Tuesday, October 25, 2011

நீ அப்படியில்லை


நமது உடல்களின்
எங்கே ஒரு கோடியில்
எல்லைகளற்ற பாசம்
குடி கொண்டிருக்கிறது
ஆனால்,முரண்பாடுகளால்
இடவெளியை ஏற்படுத்திக் கொள்கிறோம்...

நானும் நீயும்
ஒத்திசைவற்றவர்களென
நீ அடம்பிடித்து நிற்க
நேர்மையின் கோட்டில்
எனக்குள் ஏற்றி வைக்கப் பட்ட காதலை
அதன் வலியை
எத்தனை முறை
கதறிக் கதறிச் சொல்லியிருப்பேன்...

இருட்டில்,
தலையணையை துணைக்கெடுத்து
அழுது உணர்ச்சிகளை கொட்டுகிறவள்
எனது உணர்வுகளை விலக்கி வைத்து
கல்லாயிருக்கிறாள்...

எனக்குத் தெரியும்
பூனைக் குட்டி மாதிரி
துள்ளித் திரியும்
அவளது வெள்ளை மனதில்
எனக்கான பாசம் இருக்கிறது
ஆனால்,மனச்சாட்சியிடம்
முட்டி முட்டி பின் வாங்குகிறாள்...

அழுகை,தவிப்புக்கள்
இருட்டின் அரவணைப்புக்கள்
என்னைப் போல் உனக்குமுண்டு
ஆனால்,ரோஜாப் பூப் போல்
உடம்பை வைத்திருக்கும் நீ
என்னைப் போல்
எப்படி தாங்குவாய்...



Monday, October 24, 2011

என்னை தாலாட்டும் பூ


எனதான கனவுகள்
கரைந்த போதும்
உனதான ஞாபகங்கள்
கலையாமல் எனக்குள் நீந்துகிறது...

என் உணர்வுகளுக்குள்
முரண்பட்டுப் போகும் உன்னை
முழுமையாய் நேசிக்கிறேன்
என் நெஞ்சுக்குள் வைத்து
கனவு காண்கிறேன்...

இராகமாய் கசியும்
தாலாட்டும் உன் வார்த்தைக்காய்
தவமிருக்கும் இந்த குழந்தை மனதின்
ஏக்கங்களை எப்படி உனக்குச் சொல்வேன்
எனதான எதிர்பார்ப்புக்கள்
என்னிடமே திரும்பி வருகின்றன
வாங்கிக் கொள்ளத்தான் யாருமில்லை...

பாசத்திற்காய்
உன்னைப் பார்ப்பேன்
சொற்களால் என்னை வெறுப்பாய்
உன் ஓரப்பார்வையால் பூத்தூவுவாய்
நீ தூவும் அந்தப் பூவில்
நான் அடையும் ஆனந்தம் உன் மனமறியுமா...?

சந்திப்புக்களை
தவிர்த்துக் கொள்ளும் நீ
ஒரு சந்தர்ப்பம் கொடு
நான் மௌனமாக்கிய வார்த்தைகளை
கொட்டித் தீர்ப்பேன்
உன் இதயம் நனையும் படி...

வலுவிழந்த வாக்குறுதியால்
உன் மனதை காயப் படுத்தவில்லை
தொலை பேசியில் வர்ண ஜாலம் தடவும்
பகட்டுக் காரன் நானல்ல
உயிராக நேசிக்கும் உன்னை
என் மனசுக்குள் வைத்து
வாழ விரும்புகின்றேன்...

நிலவைப் போல்
குளிர்ச்சி தரும் உனக்குள்
மழையாய் நனைய வருவேன்
அப்போது உன் கண்ணம்
சிவந்து போகும் வெட்கத்தினால்...