Sunday, August 14, 2011

காத்திருப்பு.........


ஒரு கமராக் காரனைப் போல்
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்
நீதானிருக்கிறாய்........

ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்
ஒற்றைக் கண்ணால்
உன் அழகை ரசிப்பதற்காய்
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன..
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........

என் இதய அறைகளுக்குள்
குடியேறிய உன்னை
தங்கத் தட்டில்  தாலாட்டி மகிழ
ஒரு நகைக் கடையை  தேடித் திரிகிறேன்..
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..
அல்லது என்னை மறந்து
இன்னுமொருவரின் இல்லறத்தை
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?

என் பெட்டிகள் முழுவதும்
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன
பூவாய் இருக்கும் உன்னை
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை
நீ பாலை வனமாய் மாறி
சில நேரம் சுட்டெரிப்பாயோ
என மனம் பதை பதைப்பதுமுண்டு......

உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை
நிரந்தர வாடகை கமராக்காரனாய் 
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?





Monday, August 8, 2011

யார் விட்ட தவறு........

இறை இல்லம்
மனிதர்களால் நிரம்பி வழிகிறது..
அழுதழுது அவரவர் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்...
அதன் வாயிலில்..,
வறுமையின் கண்ணீரோடு
ஒரு இளம் மாது நிற்கிறாள்........

அறிமுகமில்லாத
அத்தனை பேரிடமும்
தன்னை அடையாளப்படுத்தி
கையை நீட்டி கெஞ்சுகிறாள் அந்த இளம் மாது...
அவள் இடுப்பில் ஒரு கைக் குழந்தை
அழுது கொண்டிருக்கிறது........

சில சில்லறைகளுக்காக
வருவோர்,போவோர் எல்லோரையும்
பரிதாபமாய் பார்க்கிறாள்...
சிலர் கொடுக்கின்றனர்...
இன்னும் சிலர் பாவாய் பார்த்துவிட்டு போகின்றனர்
வேறு சிலர் தூரத்தில் நின்று விமர்சிக்கின்றனர்...
ஆனால் அவள் தன்மானம் இழந்து
கெஞ்சி கெஞ்சி கையை  நீட்டுகிறாள்.....

சுமைகளை
சுமக்க முடியாத அந்த இளம் பெண்
ஆயிரம் சுமைகளை சுமந்து கொண்டு
இறை இல்லத்தின் வாசற்படியோரம்
கை நீட்டி காசு கேட்கிறாள்...
ஆயிரமாயிரம் சுமைகளை
அவள் மீது சுமத்தியது யார்...?

தன் தோழிகளுடன்
இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டியவள்
பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்க வேண்டியவள்
தனது காய்ந்து போயிருக்கும்
குடலை ஈரமாக்குவதற்கும்
தன் தோழில் சுமந்திருக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்க தன் மார்பில் பால் சுரக்கவில்லை
நல்லா சாப்பிட்டு நாளாச்சு என்றும்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
அந்த அழகான இளம் பெண்....

அந்த இளம் பெண் அழகாயிருக்கிறாள்
யார் அவளை பிச்சைக் காரியாக்கியது..
சிலர் அவளிடம் போய் விசாரிக்கின்றனர்...
இன்னும் சிலர் தன் இச்சைகளைப் போக்க
அவளை அணுகுகின்றனர்..
வேறு சிலர் விபச்சாரியாக்க முயல்கின்றனர்.....


இல்லாத அவளுக்கு
உள்ளவர்கள் கொடுத்திருந்தால்
இல்லத்திலே தங்கியிருந்திருப்பாள்..
இல்லாத போது இவளைப் போல்
பல சுமையாக்களும்,பாத்திமாக்களும்
இறை இல்லம் என்ன..?
வீதி,வீதியாய் அலைவதை தவிர்க்க முடியாது..
சில நேரம், சில நோட்டுக்களுக்காய்
தன் கற்பையும் வாடகைக்கு விடக்கூடும்......


அந்நிய ஆடவரிடமிருந்து
மறைந்து வாழ வேண்டிய நம் சமுதாயத்தின் கண்
அறிமுகமில்லாதவர்களிடம்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
இப்போது அவள்
பாவம்  பிச்சைக்காரியாய் அடையாளமாகிறாள்..
வாழ்வதற்காய் அவள்
எத்தனை காமுகர்களிடம் போராடப் போகிறாளோ....?


Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......



Monday, July 25, 2011

காத்திருந்த காதல்


சித்தீக்கின் மூத்த மாமாவின் மகள்தான் ஷாமிலா.அவள் தனதூரிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் படித்துக்கொண்டிருந்தாள்.ஷாமிலா அவளது தாய் தந்தைக்கு கடைக்குட்டி,இதனால் அவள் வீட்டில் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தாள்.இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிகம் பற்றுள்ளவள்,அழகானவள்,அன்பானவள்,இவள் விழிகளை உருட்டி,உருட்டி பேசும் போது கண்களை பார்த்துக் கொண்டு,வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.அவளது பண்புள்ள குணத்திலும்,அழகிலும் மயங்கிய சித்தீக்,அவள் மீது காதல் கொண்டான்...

ஷாமீலா மனைவியாக எனக்கு கிடைத்துவிட்டால்,என்னை விட அதிஷ்டாசாலி வேறு யாரு இருக்கமுடியும்,காலமெல்லாம் இவளை கண்கலங்காமல் காப்பேன்.வண்ண வண்ண சாரி உடுத்து அலங்கரிப்பேன்.இவ்வாறு கற்பனைகள் கலந்த கனவுகள் அவனுக்குள் முளைவிடத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல,சித்தீக் காதல் பித்தனாக மாறினான்.தனக்குள் ஏற்பட்ட காதல் உணர்வுகளை அவளைக் காணும் போதெல்லாம் அங்க அசைவுகள் மூலம் வெளிபபடுத்துவான்.ஆனால் ஷாமீலா கண்டும் காணாமலும் போவாள்.இப்படி போகும் அவள் ஒரு வேளை என்னை விரும்பாவிட்டால்,.எந்நிலை என்னாகும். என்ற அச்சம் கலந்த சந்தேகம் அவனுக்குள் சதாவும் எழத்தொடங்கியது.இனிமேல் தனது காதலை தாமதப்படுத்தக்கூடாது என்று எண்ணிய அவன் நேரடியாக அவளது வீட்டுக்குச் சென்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான்....ஷாமீலா,சித்தீக்கின் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,அவளால் காதலிக்கத்தான் முடியவில்லை,வீட்டில் தான் கடைசிப்பிள்ளை.என் தாய் என்னை படிக்க வைத்து பெரியாளாக்கி பார்க்க ஆசையாகயிருக்கிறார்.அதனை தான் நிறைவேற்ற வேண்டும்,படிக்கும் போது காதல் வந்தால் எப்படி படிக்கமுடியும்,அப்புறமா பார்ப்போம் என்று அவனது காதலை நிராகரித்தாள் ஷாமீலா...

ஆனால், சித்தீக் அவளை விட வில்லை,அவள்தான் அவனுக்கு உலகமே காலப்போக்கில் அவள் கிடைக்காவிட்டால்,நான் எப்படி வாழ்வேன்.அவளில்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.அவளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உருக்குலைந்து போனான்...இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது அவன் அந்த இடவெளிக்குள் அவளுக்கு 50 கடிதங்கள் அனுப்பியிருந்தான்.ஆனால் அவளோ ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை.இதனால் அவன் மனம் நொந்து போனான்....


அவளது மனதில் என் காதலை எப்படி புரிய வைப்பது.சரி இன்னொரு தடவை அவளது வீட்டுக்குச் சென்று தன் காதலை புரியமளவுக்குச் சொல்லிப்பார்ப்போம் என்று எண்ணிய அவன் தனது துவிச்சக்கர வண்டியை மிதித்துக் கொண்டு அவளது வீட்டுக்குப் புறப்பட்டான்.எதிபாராமல் வந்து நிற்கும் சித்தீக்கை கண்டதும் ஷாமீலா திடுக்கிட்டாள்.கதிரையில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து வந்து,என்ன திடீரென இந்தப் பக்கம்,நான் தானே சொன்னேன் காதலிப்பதில்லை என்று, மீண்டும் மீண்டும் என் பின்னால் வராதே என்றாள்.அதற்கவன், ஷாமீலா கொஞ்சம் பொறுங்க,இஞ்சப் பாருங்க உங்க நிலமையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனா என்னுடைய நிலமையை நீங்க புரியனும் அதற்காகத்தான் வந்தேன்.என்று ஆரம்பித்தவன்.....
வானம் பூமியை காதலிக்கிறது,சூரியனை சூரிய காந்தி காதலிக்கிறது,தென்னங் கீற்றுக்களை தென்றல் காதலிக்கிறது,வண்டு பூவை காதலிக்கிறது,மிருகத்தனமாய் வாழ்ந்தவர்களை காதல் நல்ல மனிதர்களாய் மாற்றியிருக்கிறது..இப்படியிருக்கும் போது உன்னை நினைத்து உருக்குலைந்து போயிருக்கும் என்னை நீதான் சரிப்படுத்தவேண்டும்.பீளிஸ் என் காதலை ஏற்றுக் கொள்ளுங்க,இல்லாவிட்டால் என்னைக் கொல்லுங்க என்றான்....சித்தீக் மூச்சு வாங்கி வாங்கி பேசுக்கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஷாமீலா,அவனது கன்னத்தில் அறைவதைப் போல் திடீரென சொன்னாள் தயவு செய்து வீட்டை விட்டு போங்க,எனக்கு உங்கள புடிக்கல்ல.. ஒரு நிமஷம்கூட இங்க இருக்க வேணாம் என்றாள். இதைக் கேட்ட அவன் இடி விழுந்ததாய் அதிர்ந்து போனான்,இனியும் அந்த இடத்தில் நிற்கக்கூடாது வேகமாக துவிச்சக்கரவண்டியை மிதித்துக் கொண்டு தனது வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டில் இருக்கும் கட்டிலில் தூங்கியவாறு யோசிக்கிறான்.சித்தீக்கின்
நினைவுகள் முழுவதும் ஷாமீலாதான் வருகிறாள்.எப்போதாவது அவள் தனக்கு கிடைப்பாள் என்ற எண்ணத்தில் மனதை திருப்திப்படுத்திக்கொள்வான்.இப்படியாக அவனது நினைவுகளும்,திருப்திப்படுத்தலும் நகர, காலங்கள் வேகமாய் உருண்டோடியது அவள் பல்கலைக்கழகத்தில் இப்போது படிக்கிறாள் பல்கலைக்கழகம் சென்றவள் அங்கு சக பல்கலைக்கழக நண்பனை காதலிக்கலானாள்.இந்த விடயத்தை தெரிந்து கொண்ட சித்தீக்கின் இதயம் ஒரு கணம் நின்றுபோனது.....அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை,ஏங்கி ஏங்கி அழுதான்,ஆம், அவன் யாருக்காக ஏங்கித்தவித்தானோ,எந்தக் காதலுக்காக காத்திருந்தானோ அந்தக் காதல் அவனிடமிருந்து நழுவிப்போய் விட்டது.
அவனுக்கு அந்தக் காதல் கொடுத்த துன்பம் கடல் அலையைப்போல் தொடர்ந்தது.அதனால் பாதிக்கப்பட்ட சித்தீக்,ஏனோ தானோ என வாழ்ந்தான்,ஒழுங்காக உடுத்துக்கொள்வதில்லை போதைக்கு தன்னை அடிமையாக்கினான்.இதனால் அவனது வாழ்வு சீரழிந்து போனது...........

( இந்த சிறு கதை நான் உயர்தரம் படிக்கின்றபோது எழுதியது )


Sunday, July 10, 2011

நீ இல்லாத போது........

நீ இல்லாத இரவு..
கனவுகளுடன் போராடி..
தோற்றுப் போகிறது...
உன் முகம் காணும் ஆவலில்..
பொழுது விடிகிறது..........

உன்னோடு வாழ்வதாய்...
கற்பனையில் மிதந்து..
மனசு இறக்கை கட்டி பறக்கிறது...
உன் பெயர் சொல்லலும்...
உன் முகம் நினைத்தலுமாய்...
காலங்கள் நகர்கிறது...
காலம் சுமந்த வலியாய்...
உன் நினைவுள் இருக்குமென...
மனசு நோகுகிறது...

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்...
உன் தெருவுக்கு வருவேன்...
நீயிருக்கமாட்டாய்...
நீ எட்டிப்பார்க்கும்  ஜன்னல் பூட்டப்பட்டிருக்கும்...
நீ இல்லாத சோகத்தில்...
மனசு வெறுமையாகிப் போகும்....
முகவரி தர மறந்து...நீ எந்த தேசத்தில் வசிக்கிறாய்......

நீ எனக்குள் காதல் மொழி பேசிய போது...
வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்...
நீ விலகிய போது...
வாழ்க்கை வெறுத்துப் போனது...
உன்னோடு கை கோர்த்து....
ஆனந்தமாய் கழித்த நாட்கள்...
இப்போது அழுது கழிகிறது....

இப்போது நீ...
என்னை மறந்து...
என் காதலை தூரமாக்கி...
இன்னுமொருவருடன் சுகமாய் வாழலாம்...
நான் உன் நினைவுகளை சுமந்து....
போராடி..போராடி..தோற்றுப் போகலாம்........


ஒரு நாள் வரும்...
அப்போது என் நினைவு உனக்கு வரும்...
நீ என்னைத் தேடி வருவாய்....
அப்போது உனக்காய்  தூக்கம் தொலைத்த விழிகளும்...
என் கண்ணீரை தாங்கிய தலையணையும்...
சாட்சி சொல்லும்...........

Saturday, July 9, 2011

சொல்ல மறந்த கதை......


சூரியன் நடு உச்சிக்கு வந்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மதிய நேரம் அது...புலுக்கம் அதிகமானதால்.என் உடல் முழுவதையும் வியர்வை நனைத்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து மீள்வதற்கு என் வீட்டுப்பக்கம் இருக்கும் ஆற்றுப்பக்கம் போனேன்.என் அம்மாவின் அப்பா  நட்டு வைத்த  தென்னை மரம் ஆற்றுப்பக்கமாய் சாய்ந்து கிடக்கிறது.சட்டையைக் கழற்றி புற் தரையில் வீசிவிட்டு,அந்த தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டேன்.நன்றாக வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆற்று நீரில் மிதந்து வர, என் உடம்புக்கு குளு குளு என்று இருந்தது.உடல் களைப்பும்,கவலையும் மறந்து தூக்கம் கண்களை தழுவிக் கொண்டிருக்கையில்,என் அம்மாவின் அப்பா என் ஞாபகத்திற்குள் வருகிறார்.என் சிறு வயதில் மிட்டாய் வாங்கித் தந்து,துவிச்சக்கர வண்டியில் என்னை சுமந்து கொண்டு ஊர் சுற்றிய,அம்மாவின் அப்பா,ஒரு நாள்,இந்த மரத்தடியில்,இது போன்றதொரு மதியப்பொழுதில் காற்று வாங்க வந்த போதுதான் இறந்து போனார்.
அவர் அதிகம் உடல் பலம் கொண்டவர்.தெலாந்து காலை தனியாக தூக்கி வைப்பார்.நாலுபேருக்கு தனியாக நின்று,தாக்கக்கூடிய பலம் கொண்டவர்.இப்படி இருந்த அந்த மனிதர்,இந்த ஆற்றங்கரையோரம்,இந்த தென்னை மரத்தடியில் காற்று வாங்க வந்தபோதுதான் இறுதி மூச்சைவிட்டர்.காற்று வாங்க ஆற்றுப்பக்கம் போன எனக்கு வியர்த்துக் கொட்டியது...ஆக காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாதவைதான்நமது உயிர்......


(... "சொல்ல மறந்த கதை" என்ற தலைப்பில்."வசந்த நிலா" நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காய். நான் எழுதிய பிரதி....சொல்ல மறந்த கதை நிகழ்ச்சி இடம் பெறாததால்,அதற்காய் எழுதப்பட்ட பிரதியை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன்....)

Tuesday, July 5, 2011

குஞ்சு பொறியா கனவுகள்......

என் மீதான...
ஆயிரம் கனவுகளை..
அடைகாத்து வைத்திருக்கிறாய்...
உனதான கனவுகள் ...,
குஞ்சு பொறிக்கும் நாளுக்காகவும் காத்திருக்கிறாய்...
உன் கனவுகளையும், காத்திருப்புக்களையும்,
அலங்கரிப்பதற்கு என்னால் முடியாமல் தவிக்கிறேன்..
பாவம் நமது காதல் இடையில்..,
மரணித்துப் போகும் என்பதை அறியாமல் ..
கனவுகளுடன் பயணிக்கிறாய்....

வாழ்க்கையின்...
எல்லா நிறங்களையும் கொண்டு..
உன்னையும்,என்னையும்.அழகுபடுத்த..
என்னிடமிருக்கும் தூரிகையை கேட்டு....
தினம் அழுகிறாய்...
தரமுடியாமல்..உறவுகள்  என்னை தடுக்கின்றன...
நீ கனவு காணும், வாழ்க்கையின் அத்தனை ஓவியங்களும்..
இடை நடுவே சிதைந்து போகும் என்பதை அறியாமல்..
உன் கனவுகளுடன், என்னை சுமந்து செல்கிறாய்.....


நீ எனக்கு கிடைக்க வேண்டிய அழகான  பூ....
இந்தப் பூவை  அணைத்துக் கொள்ள தெரியாமல்....
தினம்..தினம்..தவித்துக் கொண்டிருப்பதை..
உன் மனமறியுமா...?
உன்னை பூஜிக்க முடியாமல்..
என் மனசு வெறுமையாகிறது...
நானும்..நீயும்..இணையமுடியாத வாழ்க்கையில்..,
கனவுகளுடன் பயணிக்கிறாய்.....

உன் சிறு புன்னகையில்...,
என் மனசை அள்ளியெடுத்தவள்..
சிறு துளி கண்ணீரில்....,
ஆயிரம் கதைகள் சொல்பவள்....
என் கண்ணீரும்,புன்னகையும் உனக்குத்தான் என ஒப்பந்தம் செய்வாள்..
பாவம்..ஒப்பந்தம் தூக்கி வீசப்படும் என்பதையறியாது,
வாழ்க்கையின் கனவுகளுடன் பயணிக்கிறாள்...

இன்னுமொரு இதயமாக எனக்குள் வந்தவள் நீ....
ஆனால்,பொருத்தமில்லா சோடிகளென....
சிலர் சாபமிடுகின்றனர்..உன்னையும்,என்னையும்..
சாபங்கள் பலமாக பிரார்த்திக்கப்படுகையில்.,
நான் நசுங்கிப்போகிறேன்..
உன்னை அணைத்துக் கொள்ளமுடியாமல்..,

வாழ்க்கையின்.,
ஆயிரம் கனவுகளுடன் நீ பயணிக்கிறாய்....
அந்தக் கனவுகளை அலங்கரிக்க முடியாமல்..,
நான் தவிக்கிறேன்.....